Monday, February 16, 2009

எம்.எஸ். பசீர் அகமது D.F.A.

ஞானத் தமிழ் மகனே கண்ணுறங்கு !

கல்லூரி முதல்வராய் கனிமொழி பேசி
அதிரையில் ஆரம்பித்த அறிமுகம்
அழகுத் தமிழ் பழகு மொழிப் பெருமிதம்..
கோட்டும் சூட்டும் போட்டு –
வகுப்பறை மேடையில் நீ!
வாய்திறந்து கூறிடும் தமிழால்
குண்டூசி விழும் ஓசை கூட மிகத்
துல்லியமாய் கேட்டு விடும் !
மாணவர்களை மாண்புமிக்கவர்களாக நீ
மாற்றிய விதமோ அனைவருக்கும் பெருமை

இறைவன் உனக்களித்த அங்கீகாரம்
‘இறையருட் கவிமணி’ எனும் பட்டம்
அதிரை மக்கள் அளித்த அழகிய சிறப்பு ..

அடியேனின் நூல் –
தமிழக முஸ்லிம் திறமையாளர்கள்
இதற்கு நீ அளித்த ஒத்துழைப்பை
என் ஆவி இருக்கும் வரை..
இன் இதயம் மறக்காது உன் நினைவை,

பொறுமைக் கடல் நீ ..!
நூல்களுக்கு வழங்கிய மதிப்புரைகள்
உலக மாந்தர்களை நல்வழிப்படுத்தும் !
இறைவனின் வல்லமையை நீ
கடுமையான உழைப்பில் கண்டாய்
அதற்கு சாட்சி

‘மிக்க மேலானவன்’ எனும் அதிசய நூல் !
பெருமானார் (ஸல்) புகழ் பாடினாய் நீ..
உன் புகழ் மிக்க ‘நா’ த் திறத்தால்
தமிழகப் புனித கவியரங்குகளில் நீ
தலைப் ‘பா’ பாடியே அசத்தினாய்.

ஆயுத எழுத்தைப் போன்று அழகு முத்திரையை..
உன் நெற்றியில் பதித்துக் கொண்டாய்!
இறைவனைத் தொழுததே உன் நெற்றியில் தழும்பு..
இறைமறைக் கருத்தை உணர்த்துவதே உன் இயல்பு!

“அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என
முஸம்மில் குடிலில் இலக்கிய வளமாய்
ஞானச் சுடராய் வாழ்ந்தாய்..
நீ வாழ்ந்ததால் தக்கலைப் பெரு நகருக்குத்
தனித் தமிழ் பெருமை உண்டு!
ஆன்மீக இன்பம் காட்டும் உன் அகம்!
இன்னும் இருந்திருந்தால் நீ
இன்பத் தமிழ் ஞானமுது ஊட்டுவாய்
என்ன செய்வேன் நான் ..
இறைவன் நாட்டம் அப்படி!

கண்ணுறங்கு கண்ணுறங்கு ..
ஞானத் தமிழ்மகனே கண்ணுறங்கு!
இன்ஷா அல்லாஹ்.. நிச்சயம்
மறுமை நாளில் உனக்கொரு இடமுண்டு;
அதுதான் அழகிய சுவனப் பூங்கா ..
அல்லாஹ்வின் அருள்மிகு நேசருக்கு
அவன் வழங்கும் சிம்மாசனம் அதுதானே?

- எம்.எஸ். பசீர் அகமது D.F.A.
அடியக்கமங்கலம்

பள்ளிப் பண்

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாஃபீ கல்பீ கய்ருல்லாஹ்
நூரு முஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹா – ஹக்கு
லாயிலாஹா இல்லல்லாஹ்

இறைவா உனது கருணையினால்
.....இம்மை மறுமை பேறுகளைக்
குறையா தெமக்கு கொடுத்திடுவாய் !
.....கொடுமை யனைத்தும் தடுத்திருவாய்
நிறைவாயுள்ள நலன் ஈந்து
.....நெஞ்சம் மலரச் செய்திடுவாய் !
கறையாயுள்ள பகுதிகளைக்
.....கழுவித் தூய்மை யாக்கிடுவாய் !

பிறையாய்த் திகழும் எம்பள்ளி
.....பிறைபோல் வளர உதவிடுவாய் !
நிறைவாம் சீதக்காதி பெயர்
.....நின்றே நிலவும் நிறுவனத்தார்
நிறைவே கொள்ளத் துணைபுரிவாய்
.....நிலைபேறுடைய எம் கொள்கை
குறையா தோங்க அருள் புரிவாய் !
.....குறைகள் தீர்க்கும் கோமானே !

அறிவுக் கடலாம் கஸ்ஸாலி
.....அடையும் நெஞ்சின் விரிவைப்போல்
அறிவின் ஒளியாய் எம்நெஞ்சை
.....அழகாய் அமைப்பாய் அருளாளா !
செறியும் கல்வி எமக்கூட்டும்
.....சீரிய நேரிய ஆசிரியர்
அறியும் பெற்றோர் அனைவருக்கும்
.....அருளைப் பொழிவாய் ரஹ்மானே !

(இயற்றியவர் : பிறைப்பள்ளியின் நிறுவன முதல்வர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர், M.A. அவர்கள்)

Thursday, February 5, 2009

நீர் வீழ்ச்சி



"இதென்னடா இது?
அந்தப் பாறை முகடுகளில்
தண்ணீரைத் துவைத்துக்
காயப்போட்டது யார்?

* * *

இங்கென்ன
தண்ணீர் முத்துக் குளிக்கிறதா?

இது என்ன
வானுக்கும் பூமிக்கும்
வைர நெசவா?

அது என்ன
தற்கொலை புரியும் தண்ணீருக்கு
அத்தனை ஆனந்தமா?"

என்று நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகை தன் அபரிதமான கற்பனையில் அருமையாகச் சொல்லப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் வரிகளைப் படித்து ஆனந்தமடைந்தேன்.

"கவிதையிற் பேசிய காவலர்கள்" என்ற இறையருட் கவிமணியின் கட்டுரையில் இதுபோன்ற ஒரு அழகிய வருணனையை நாம் காணலாம். முகலாயக் கவிப்பேரரசி ஜெய்புன்னிஸாவின் கவிதை ஒன்றை இறையருட் கவிமணி அவர்கள் இவ்வாறு மொழி பெயர்க்கின்றார் :

" நீர் வீழ்ச்சியே!
யாருக்காக நீ கவல்கிறாய்?
யாருக்காக நீ தலையைத்
தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறாய்?
என்னைப் போல் இரவனைத்தும்
தலையைப் பாறைகளில்
முட்டி மோதிக் கொண்டு
அழுவதற்குக் காரணமான
உன் துயர்தான் யாது?"

அற்புதமான இக் கற்பனை நம்மை பரவசப்படுத்துகிறது அல்லவா?

இவரது மாணவர்களில் சிலர்

பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் மாணவர்களாய்த் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்கள்:

1. கவிஞர் 'சிற்பி' பாலசுரமணியன் - சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர், கோவை பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவாராக பணீயாற்றி ஓய்வு பெற்றவர்.

2. கலைமாமணி மணவை முஸ்தபா - யுனெஸ்கோ கூரியர் ஆசிரியர்

3. திரு. சாதிக் பாட்சா - திராவிடக் கழக முன்னோடிகளில் ஒருவர், முன்னாள் தமிழக அமைச்சர்

4. பேராசிரியர் எம்.ஏ.அப்துல் காதர் - அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வரும், இந்நாள் தமிழ்த்துறை தலைவருமாக இருப்பவர்

5. திரு. நடராசன் - உச்ச நீதி மன்ற குற்றவியல் வழக்கறிஞர்

6. திரு. மு. கண்ணன் - சென்னை விமான நிலைய முன்னாள் துணை கலெக்டர்

7. பேராசிரியர் இரத்தின நடராசன் - ஐ.ஆர்.எஸ். பள்ளிசாரா மாணவர் கல்விக் கருவூல இயக்குனராய்ப் பணியாற்றியவர்

மூன்றாம் முஸ்லிம் தமிழ்ப் பேராசிரியர்

கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதாக இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி முன்னாள் முதல்வரும், தமிழறிஞருமாகிய கேப்டன் அமீர் அலி குறிப்பிடுகிறார்.

"திருச்சி கிறித்துவக் கல்லூரி ஒன்றில் புலவர் பிச்சை இபுறாகீம் பணியாற்றினார். அவர்தான் முதல் முஸ்லிம் தமிழ்ப் பேராசிரியர். இரண்டாவதாக, அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பணீயாற்றினார் பேராசிரியர் அப்துல் காதர். மூன்றாவதாக, இறையருட் கவிமணி".

[தகவல் : முனைவர் ஹ.மு.நத்தர்சா]

அதிரையில் கல்விப் பணி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதர் முஹ்யத்தீன் கல்லூரியில் 1962 முதல் 1967 வரை தமிழ்த் துறைத் தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார் கா. அப்துல் கபூர்.

அவர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த திரு. நெ.து. சுந்தரவடிவேலு பங்கேற்றார். முதல்வரின் வரவேற்புரையால் கவரப்பட்ட நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் தான் ஆற்றிய உரையில்,

"நான் எத்தனையோ அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். இன்று உங்கள் முதல்வர் நிகழ்த்திய சொற்பொழிவைப் போன்று வேறெங்கும் கேட்டதில்லை. மனம்விட்டுச் சொல்கிறேன். சிறிது கூட தடையில்லாமல் சரளமாகவும் வேகமாகவும் எப்படி அவரால் பேச முடிகிறது என்று வியந்து போனேன். தமிழ் பேச்சாளர்களில் உங்கள் முதல்வரின் பேச்சு தனிப்பாணி; அவரது மொழியழகும் சொல்லழகும் நடையழகும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன " என்று புகழ்ந்துரைத்தார்.

[ஹ.மு.நத்தர்சா எழுதி சாகித்திய அகாதெமி வெளியிட்ட "இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்" என்ற நூலிலிருந்து]

Sunday, February 1, 2009

புதுக்கல்லூரி

கலையாட்சி செய்கின்ற
கவினாறும் சென்னையிலே
உடலின் கண் விழியைப்போல்
உடையிடையே பாகைப்போல்
கடலின் கண் முத்தைப்போல்
கவின் பொய்கைத் தாமரைப்போல்
நகர் நடுவன் தலைநிமிர்ந்து
நல்லறிவு மாமலையாய்
திகழ்கின்ற கல்லூரி...
(சென்னை புதுக்கல்லூரியைப் புகழ்ந்து இறையருட் கவிமணி அவர்கள் கவியரங்கத்தில் பாடியக் கவிதை)

பேராசிரியரின் கல்விப் பணி

1946 - 1947
பேராசிரியர், தமிழ்த்துறை,
முஸ்லிம் அரசினர் கல்லூரி, சென்னை

1947 - 1952
தமிழ்த்துறைத் தலைவர்,
இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி

1952 - 1956
கீழ்த்திசை மொழித்துறைத்தலைவர்,
ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி

1956 - 1962
தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர்,
ஹாஜி கருத்த இராவுத்தர் கெளதிய்யா கல்லூரி, உத்தம பாளையம்

1962 - 1967
தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர்,
காதிர் முஹ்யத்தீன் கல்லூரி, அதிராம்பட்டினம்

1967 - 1974
முதல்வர்,
பிறைப் பள்ளி, வண்டலூர், சென்னை

1976 - 1980
நிர்வாக அதிகாரி,
அல்-அமீன் உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம்

நிர்வாக அதிகாரி,
திராவிட மொழி இயல் நிறுவனம், திருவனந்தபுரம்

வகித்த பிற பொறுப்புகள்:
  1. தமிழ்ப் புலவர்க்குழு உறுப்பினர்
  2. மதுரை, தஞ்சை மாவட்ட இலக்கிய ஆட்சிக்குழு உறுப்பினர்
  3. திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைகுழு உறுப்பினர்
  4. சென்னை பல்கலைக்கழக பாடநூல் உறுப்பினர்