Friday, September 25, 2009

முத்தமிழ் வளர்ச்சியில் ..

கவிமணி பேரா . கா. அப்துல் கபூர் அவர்கள் தமிழக அரசின் பொற்கிழி விருது பெற்றவர் . இவரின் "மிக்க மேலானவன்" புத்தகம் இறைமறையின்

87ஆவது அத்தியாயத்தின் விளக்கவுரை போல் அமைந்ததாகும்." ஞானப்புகழ்ச்சி ஓர் ஆய்வு" எனும் புத்தகம் தக்கலை பீரப்பா அவர்களின் பாடலை இவர் ஆய்வு செய்து எழுதியது .

இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல், தீன்வழிச் செம்மல், நபிவழிச் செல்வர் , கன்சுல் உலூம் (அறிவுக் களங்சியம்) ஆகிய கெளரவங்களைப் பெற்ற பேராசிரியர் கா. அப்துல் கஃபூர் எம். ஏ.,டி.லிட் அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். ஒரு தமிழ்ப் பேராசிரியரால் கல்லூரி முதல்வராகவும் பன்மொழிப்புலவராகவும், பன்னூல் ஆசிரியராகவும் கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும், தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் அரைநூற்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்குத் 'தமிழ்ச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவரது தமிழ்ப்புலமைக்குச் சான்றாக அமையும் அவரது 'அரும் பூ ' என்னும் குழந்தைப்பாடல் நூலினை ஆய்வு செய்தோர், பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பட்டம் பெற்றுள்ளனர்.

'இனிக்கும் இறைமொழிகள்' என்னும் பெயரில் பேராசிரியர் அவர்கள் , திருக்குர் ஆன் வசனங்கள் சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ள ஆய்வுகள் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இவையன்றி, கற்கண்டு சொற்கொண்டு உரையாற்றி உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடல் கடந்த நாடுகளிலும் முத்திரை பதித்த மூத்த தமிழரிஞர். இறையருள் பொழியும் கவிதைக் கொண்டல். அரும்பு உள்ளங்களுக்கும் கவிமழை தந்த கரும்புக் கவிஞர் இவர். பைந்தமிழ் நாட்டில் பாட்டரங்குகள் தோன்றக் காரணமான முன்னோடி. வாடாத மாலை இலக்கியங்கள் பலவற்றை வண்ணத் தமிழில் இயற்றிச் சிறந்த காலத்தின் கண்ணாடி. உரைநடைத் தமிழில் உயிரூட்டப் பாணியை ஆக்கி அழகு தமிழுக்கோர் அப்துல் கஃபூர் ' எனப் பல்கழைக் கழகத் தமிழ்த் துறை தலமைப் பேராசிரியராலேயே பாரட்டப் பட்டவர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அதிராமப்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர். தமது இளவல் பேரா. முஹம்மது பாரூக் அவர்களின் உறுதுணையோடு "மதி நா " (அறிவும் நாவும்) என்ற இதழைப்பல்லாண்டுகளாக நடத்தியவர்.

பேராசிரியர். முஹம்மது பாரூக் அவர்கள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியர் மற்றும் சென்னை புதுக்கல்லூரியில் சிறப்புப் பேராசிரியர் .தமிழ் இலக்கியக் கூட்டங்கள் பலவற்றைத் தலைமையேற்று நடத்தியவர். தற்போதும் மலேசியா, சிங்கப்பூர் என ஒழிவின்றி, தமிழ் இலக்கிய மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தமிழ்த் தொண்டு செய்து வருபவர்.

நன்றி: நல்லடியார்/ எதிரொலி ஜூலை 2006

Thursday, September 24, 2009

ஆணிவேர்

இறையருட் கவிமணி – என்
இதயத்தின் ஒளிமணி !

சொல்லும் செயலும்
விரலும் ரேகையுமாய் விளங்கிய வித்தகர் !

நாக்குத் திரியில் மறைச்சுட ரேந்தி
தீனெறி காட்டிய மனித விளக்கு

பாதத்தை இவர்கள் நடத்திய முறையிலும்
‘இபாதத்தை’யே காண முடிந்தது !

எழுத்துக் களிலும் இறை வணக்கமே
இலங்கச் செய்த இறைமை ஞானி !

இவர்களின் எழுத்துக்கள் –
வெள்ளைத் தாள்களை ‘முஸல்லா’ வாக்கி
நேர்க் கோடுகளில் – தம்
தொழுகையின் ‘சப்’பை நிறுவிக் கொண்டவை !

இவர்களிம் வியப்புக் குறிகளில் –
இறக்கே செலுத்தும் ‘இஃதிதால்’ இருக்கும் !

இவர்களின் கேள்விக் குறிகளும் –
இறையொரு வனுக்கே ‘ருகுவு’ச் செய்வன !

வாய்மை என்னும்
வெண்டளைகளால் விரவப் பட்ட
இவர்களின் வெண்பா வாழ்வு
முற்றிலும் இறைக்கே ‘ஸுதாய்’ அமைந்தது !
ஏகத் துவமே இவர்கள் வாழ்வின்
‘கஃதா’ வானது !

இறையச் சத்தால் உதறும் இவர்களின்
எழுது கோலின் மைத்துளிகள்
என்னில் கூடக்
கவித் துவத்தைக் கருக்கொள்ள வைத்த
ஆன்மத் துளிகள் !

இவர்களின்
சந்த மகரத்தால் பூப்பெய்தி
காய்த்துக் குலுங்கும்
கிளுவைக் கனிகள் – என் கவிதைகள் !

‘தேமாங்கனி’ யாய்த் தெவிட்டா தினிக்கும்
நாமம் கொண்ட இந்த
அபூ ஸையிதின் குதிரைச் சாணமாய்
என்னை நானே ஆக்கிக் கொண்டதால்

அகிலும் கோங்கும் சந்தன வகைகளும்
வீற்றிருக் கின்ற
அறிஞர் நெஞ்ச அரியா சனங்கள்
எனக்கும் கூடச்
சரியா சனத்தைத் தந்திருக்கின்றன !

கழிவிலா மெய்ங்ஞானக் கற்பூரப் பெட்டகமாய்ப்
போற்றக் கிடைத்த புனிதகுரு ! – எனையும்
ஏற்றணைத்த தால்தான் இன்றுவரை நானிங்கே
செல்லரிக்கப் படாத சிறுநூலாய் இருக்கிறேன் !

சிந்தனை ஊற்றுக்கள் நெஞ்சில் உதித்தோடச்
செய்திடும் இவர்களின் எழுதுகோல்
மூஸாவின் கைத்தடியாய்க்
கண்முன்னே காட்சிதரும் !

அறிவுப் பசிப்பயண அன்பர்க ளெல்லாம்
சிறகடிக்கும் வெளவாலாய்ச் சேர்ந்து விருந்துண்ணும்
செஞ்சொற் கனிப்பொழில் இவர்கள் !
மடைக் கரும்பின் இந்த இனிய (அடிப்) பகுதியை
மண் அணைத்துக் கொண்டது.

மண்ணுக்குள் சென்றிருக்கும் இவர்கள் –
எங்கள் ஆணிவேராய் இருக்க்கின்றார்கள் !
நாங்கள் – இவர்களின்
கிளைகளும் விழுதுகளுமாய் இருந்துகொண் டிருக்கின்றோம் !

நில்லா உலகில்
நிற்கும் இவர்களின் சமாதி –
சொல்லேர் உழவர் இவர்கள்
சமுதாயப் பயிர்செழிக்கத்
தம்மைத் தாமே – ஓர்
எருமுட்டாய் விட்டுச் செல்லும் இடம் !

- கவிஞர் கஃபூர் தாசன்