Tuesday, January 20, 2009
அருள் புரிவாய்!
இம்மை மறுமை செம்மையுற
தேமாங் கலிமா இறுதியிலே
தெவிட்டா துரைத்து நன்மைபெற
பூமா மணமே மண்ணறையில்
பொலிய உயிரும் நன்மையுறக்
கோமா னுன்னை வேண்டுகின்றோம்
குறையா தமக்குக் கொடுத்திடுவாய்!
- இறையருட் கவிமணி
கவிஞர் தா. காசீம்
பேரரங்கின் கவியரசே!
உரைக்கின்ற கவிகேட்டு
"உரைக்" கின்ற பொறுப்பேற்றீர்!
பேராசி தந்ததென்னைப்
பணித்தமைக்குப் பணிவன்பின்
நன்றி சொல்வேன்
- சமுதாயக் கவிஞர் தா. காசீம்
நீதிபதி மு.மு.இஸ்மாயீல்

பல அருமையான நூல்களை எழுதியுள்ள இறையருட் கவிமணி அவர்களின் சேவை பாராட்டிற்குரியது. இத்தனை நூலகளை ஒருவர் எழுதியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. மனம் சுத்தமாக இருந்தால்தான் நம்மை அறியாமலே சொற்கள் வந்து விழும். அந்த மாதிரிச் சொற்கள் அமைந்த கவிதைகள் இங்கு நிறைய இருக்கின்றன.
அப்பேர்ப்பட்ட ஒரு கவிஞருக்கு - புலவருக்கு - மார்க்க மேதைக்கு இப்பரிசை வழங்குவதில் யாருக்கும் சற்றேனும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. அவர்களுக்குத் தகுந்த, அவர்களது செயலுக்கும் சேவைக்கும் அங்கீகாரம் அளிக்கின்ற முறையில், இந்தப் பரிசினை நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(21.06.1999 ஆம் ஆண்டு சென்னை சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையத்தின் 1999-ஆம் ஆண்டுக்குரிய 'செய்கு சதக்கத்துல்லலாஹ் இலக்கியப் பரிசு' இறையருட் கவிமணி அவர்களுக்கு வழங்கப்பட்டபோது விழாத்தலைவர் மாண்புமிகு நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள் பரிசு வழங்கி ஆற்றிய உரையிலிருந்து)
அபிவை ஜின்னா
புகுந்து வரும் தமிழ்க் காற்று!
அதிமதுரச் சொற் சிலம்பில்
அகங்குளிரும் அமுத ஊற்று!
புதினச் சொல் புகுந்து வரும்
புதுமைகளின் பூங்காற்று - இது
மதுரகவி கபூரண்ணா
மணித்தமிழின் பூச்செண்டு!
தேன்சிந்தும் எழுத்தாற்றல் - இவரின் ஏற்றம்!
தெய்வீக அருள் சுரக்கும் - இவரின் ஞானம்!
காணுகின்ற காட்சிகளைக் கவியில் காட்டும்!
கருத்தழகு கபூர் மாட்சி - கவிச்சொல்லாட்சி!
வான்சிந்தும் திருமறையில் - வாழ்வைக் காணும்
வற்றாத பேரன்பு - வாஞ்சை மிகு நற்பண்பு!
திருவிதாங்கோடு பெற்ற - தீன் தமிழ்க்கவிஞர் இவர்!
மருவிலா வாழ்வு கண்ட - மாணிக்க மனிதரிவர்!
அப்துல் கபூர் எனும் - அற்புத ஆசான் இவர்!
ஒப்பிலா உயர்வு கண்ட - உன்னத அறிஞர் இவர்!
அப்பப்பா! இவர் மறையின் - ஆதங்கம் அணையவில்லை இவரை
அல்லாஹ் சுவனத்தில் - அகங்குளிர அமர்த்திடுவான்!
அதுவே நம் பிரார்த்தனை - அல்லாஹ்விடம் வேண்டிடுவோம்!!
Monday, January 19, 2009
ஹ,நசீருத்தீன்
நிறை வாழ்வு
வாழ்ந்தவர்.
அஞ்சுவன்னச்
சோலையில்
கொஞ்சும்
தமிழ்க்கிளி.
கவிதைகளை
கருக்கொண்ட
கார்மேகம்.
மழையாய்ப்
பொழியும்
சொல்லாற்றல்.
அமுதச் சுவைகாட்டும்
அற்புதக்
கவியாற்றல்.
பூமான் நபிமீது
புகழ்ப்பா பொழிந்த
பொன்கரத்துப்
புதையல்!
பளிங்கைப் போல்
எளிய நெஞ்சகம்.
முத்தமிழில்
வித்தை காட்டியவர்.
எளிய தமிழுக்கு
வித்து ஊன்றியவர்.
அறியாமைக்கு எதிரான
குத்தீட்டி
உயர்ந்த
சுவனத்துச் சோலையில்
கொள்கைப் பறவையாய்ச்
சிறகு விரிக்க
என் துஆக்கள்!
ஹ. நசீருத்தீன்
திருவிதாங்கோடு
கவிஞர் மு.மேத்தா

இறையருட் கவிமணி! இலக்கிய மாமணி!
அப்துல் கபூரை அறியார் எவருளர்?
கம்பீரமான கவிதைக் குயில் அது!
களங்கமில் லாத பெளர்ணமி நிலவது!
வண்ணத் தமிழ்ப் பயிர் வளர்த்த வயலது!
செருநர் நடுங்கிய செந்தமிழ்ப் புயலது!
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதிபோல்
உருவமும் உள்ளம்போல் ஓங்கி உயர்ந்தது!
இதயங் கவரும் எழுத்தாளர் அவர்!
பேராற்றல் பெற்ற பேச்சாளர் அவர்!
அன்னைத் தமிழுக்கும் ஆண்டவன் பணிக்கும்
தன்னை அர்ப்பணித்த தமிழ்ப்பே ராசான்!
திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!!
கவிஞர் சாது
ஓதிய திருமறைக் கொள்கைகளை
பேரிறைத் தூதரின் போதனையைப்
புரிந்திடச் செய்த கவிமணியே!
இலக்கிய உலகின் மேம்பாட்டை
இஸ்லாம் தந்த வழிபாட்டை
உலகம் போற்றும் நெறிகளிலே
உறுதி யாக்கிக் காட்டியவர்!
மோனை எதுகை மோதிவரும்
முத்தமிழ் மொழியின் பல்சுவையும்
தானே படித்துத் தெளிகின்ற
தமிழாய்ச் செதுக்கித் தந்தவரே!
எழுத்தும் பேச்சும் மணம்வீசும்!
எல்லோர் நாவும் புகழ்பாடும்!
அழுத்தம் நிறைந்த தன்மான
ஆற்றல் ஞானம் பெற்றவரே!
திருவை மண்ணின் புகழுக்குத்
தேன்தமிழ் அப்துல் கபூரவரின்
பெருமை மிக்க பிறப்பென்றும்
பேசப் படுமே சிறப்போடு!
உலகம் காக்கும் பேரிறையே
உயர்கவி யாத்த கவிமணியின்
நலமார் மறுமை வாழ்வுக்கு
நற்றுணை புரிந்திடு அல்லாஹூ!