Wednesday, January 28, 2009

வார்த்தைச் சித்தர்

செந்தமிழ் வார்த்தைகளைக் கொண்டு சொற்சிலம்பு ஆடுவதில் அவருக்கு நிகர் அவரே. சந்தம் கமழும் சந்தன வரிகள் அவைகள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் சொட்டும் மொழிகள்.

நாயகத் திருமேனியை நபிமணி மாலையில் வருணிப்பதைப் பாருங்கள் :

“தத்தித் தாதி துதைத்த நபி
தத்தை துதித்த தூதுநபி
தித்தித் தாதி ததைத்த நபி
தித்தித் தோதி துதித்த நபி”

எடுத்துக் காட்டாக இதோ ஒரு ஓவியக் கவிதை :

“நன்னபி மன்னபி முன்னுநபி
நந்நபி மென்னபி மின்னுநபி
இன்னபி பொன்னபி யென்னுநபி
இதயங் குளிர உன்னுநபி”

இன்னுமொரு வார்த்தை ஜால வரிகள் :

“மண்ணும் விண்ணும் எண்ணுநபி
மண்ணி லெண்ணும் திண்ணநபி
கண்ணும் எண்ணும் பண்ணுநபி
கண்ணி லிண்ணும் வண்ணநபி”

ஆவி பிரியும் வேளையில்

எண்ணமே வாழ்வு என்பார்கள். இறையருட் கவிமணி இயற்றிய “துஆ நூறு” என்ற கவிதைகள் மிகவும் உருக்கமானவை.

“ஆவி பிரியும் அந்த வேளையில்
நாவினால் கலிமா நவின்றிடச் செய்வாய் !
நாயனே உன்றன் நல்லடியார்களுள்
நேயமாய் எனக்கு நல்லிடம் அளிப்பாய்”

என்ற வரிகள் மனதை நெகிழச் செய்யும்.

11.01.2002 வெள்ளி மாலை 'அஸர்' தொழுகைக்காக ‘ஒளு’ எடுத்த சற்று நேரத்தில் கலிமா மொழிந்தவாறு அவர்கள் ஆவி பிரிந்ததை அந்த நேரத்தில் அவர்கள் அருகே நின்று கொண்டிருந்த ஆறு பேரும் அந்த காட்சியைக் கண்டார்கள்.

திருமலர் மீரான்

1977 – நவம்பரில் திருவிதாங்கோட்டில் ‘எல்லாம் எழுத்துக்கள்’என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்திற்கு இறையருட் கவிமணி அவர்கள் தலைமை வகித்தார்கள். “ஈ” என்னும் தலைப்பில் திருமலர் எம்.எம்.மீரான் கவிதை பாடினார். ஈயாத புல்லர்களையும், ஈஈ என இளித்து வாழும் இளிச்சவாயர்களையும், சீதனத்திற்காக ஈஈ என இரக்கும் இதயம் இரும்பாகிப்போன இளைஞர்களையும் பிடித்து கடுமையாகச் சாடினார்.

அக்கணம் இறையருட் கவிமணி அவர்கள் பாடிய வரிகள் இவை :

“எழுச்சிக் கவிஞர் எம் எம் மீறான் ஈன்றார்
ஈயடிச்சான் காப்பி யில்லாத கவிதைகளை !
ஈமானில்லாது ஈயாது இருகை யேந்தும்
இளிச்ச வாய்ச் சீமான்களை சீறும் கவிதையிது”

ஆலிம் கவிஞர்

நிறையருளைப் பெற்றவரும் நெஞ்சினிக்க
நிறைகவிதை தருவோரும் நாமெல்லோரும்
இறையருட்பா மணியென்றே போற்றத்தக்க
இயல்பான கவியாற்றல் பெற்ற செல்வ !

- ஆலிம் கவிஞர் அல்ஹாஜ் ஜி.எம்.சதக்கத்துல்லாஹ் சிராஜ் பாகவி