Monday, January 12, 2009

சாகித்திய அகாதெமி நூல்



புது தில்லி சாகித்திய அகாதெமி, தமிழ் மொழியில் "இந்திய இலக்கியச் சிற்பிகள்" என்ற நூல் வரிசையில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய ஆய்வு நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

காலத்தால் மறையாத சிறந்த இலக்கியவாதிகளை அடையாளம் கண்டு அவர்களின் பெருமையை தமிழ்க் கூறும் நல்லுலகம் அறிந்துக் கொள்ளும் வகையில் அச்சிட்டு வரும் இவர்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது.
"கா.அப்துல் கபூர்" என்ற பெயரில் இறையருட் கவிமணியைப் பற்றி பேராசிரியர் ஹ.மு.நத்தர்சா அவர்கள் வெளியிட்டுள்ள நூல் எல்லோரும் படித்து பயன்பெறத்தக்க அருமையான தகவல் பெட்டகம்.

கபூர் சாகிப் அவர்களின் அனைத்து படைப்புகளையும் துருவித் துருவி ஆராய்ந்து மிகச் சிறப்பான முறையில் அவரது மாண்புகளையும், இலக்கியத் திறமைகளையும் திறம்பட படம் பிடித்துக் காட்டியுள்ளார். 'இறையருட் கவிமணி'யின் வாழ்வும், பணியும், அவரது உரைநடை மற்றும் சிறுவர் இலக்கியம், அவரது கவிதையில் காணப்படும் கவிதை வளம், அவரது பன்முக ஆளுமை இவையனைத்தையும் ஒன்று விடாமல் அழகாக வரிசைப் படுத்தி அருமையான முறையில் வடித்துத் தந்துள்ளார்.

"இன்தமிழுக்கு ஏற்றம் தந்த இலக்கியச் சிற்பி ஒருவரின் வாழ்க்கையோவியத்தை வரைந்து காட்டும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதில் நான் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்" என்று எழுதி தன் முன்னுரையில் உவகையுறுகிறார் இந்நூலாசிரியர் பேராசிரியர் ஹ.மு.நத்தர்சா.

இவர் சென்னை புதுக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர். படைப்பிலக்கியவாதி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வழங்கியுள்ளார். புதுவையரசின் 1996- ஆம் ஆண்டிற்கான கம்பன் புகழ்ப்பரிசு பெற்றவர். வரலாற்று ஆய்வுநூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக் கோவைகளில் இக்கால இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் குறித்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இஸ்லாமிய சிறுகதைகள் குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

எளிய நடையில் செந்தமிழுக்கு சிறப்பையளித்த 'இறையருட் கவிமணி'யின் பெருமையினை சான்று கூறும் இவரெழுதிய இந்நூல் ஒவ்வொருவரும் படித்து இன்புறத்தக்கது.

- அப்துல் கையூம்