Monday, February 16, 2009

எம்.எஸ். பசீர் அகமது D.F.A.

ஞானத் தமிழ் மகனே கண்ணுறங்கு !

கல்லூரி முதல்வராய் கனிமொழி பேசி
அதிரையில் ஆரம்பித்த அறிமுகம்
அழகுத் தமிழ் பழகு மொழிப் பெருமிதம்..
கோட்டும் சூட்டும் போட்டு –
வகுப்பறை மேடையில் நீ!
வாய்திறந்து கூறிடும் தமிழால்
குண்டூசி விழும் ஓசை கூட மிகத்
துல்லியமாய் கேட்டு விடும் !
மாணவர்களை மாண்புமிக்கவர்களாக நீ
மாற்றிய விதமோ அனைவருக்கும் பெருமை

இறைவன் உனக்களித்த அங்கீகாரம்
‘இறையருட் கவிமணி’ எனும் பட்டம்
அதிரை மக்கள் அளித்த அழகிய சிறப்பு ..

அடியேனின் நூல் –
தமிழக முஸ்லிம் திறமையாளர்கள்
இதற்கு நீ அளித்த ஒத்துழைப்பை
என் ஆவி இருக்கும் வரை..
இன் இதயம் மறக்காது உன் நினைவை,

பொறுமைக் கடல் நீ ..!
நூல்களுக்கு வழங்கிய மதிப்புரைகள்
உலக மாந்தர்களை நல்வழிப்படுத்தும் !
இறைவனின் வல்லமையை நீ
கடுமையான உழைப்பில் கண்டாய்
அதற்கு சாட்சி

‘மிக்க மேலானவன்’ எனும் அதிசய நூல் !
பெருமானார் (ஸல்) புகழ் பாடினாய் நீ..
உன் புகழ் மிக்க ‘நா’ த் திறத்தால்
தமிழகப் புனித கவியரங்குகளில் நீ
தலைப் ‘பா’ பாடியே அசத்தினாய்.

ஆயுத எழுத்தைப் போன்று அழகு முத்திரையை..
உன் நெற்றியில் பதித்துக் கொண்டாய்!
இறைவனைத் தொழுததே உன் நெற்றியில் தழும்பு..
இறைமறைக் கருத்தை உணர்த்துவதே உன் இயல்பு!

“அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என
முஸம்மில் குடிலில் இலக்கிய வளமாய்
ஞானச் சுடராய் வாழ்ந்தாய்..
நீ வாழ்ந்ததால் தக்கலைப் பெரு நகருக்குத்
தனித் தமிழ் பெருமை உண்டு!
ஆன்மீக இன்பம் காட்டும் உன் அகம்!
இன்னும் இருந்திருந்தால் நீ
இன்பத் தமிழ் ஞானமுது ஊட்டுவாய்
என்ன செய்வேன் நான் ..
இறைவன் நாட்டம் அப்படி!

கண்ணுறங்கு கண்ணுறங்கு ..
ஞானத் தமிழ்மகனே கண்ணுறங்கு!
இன்ஷா அல்லாஹ்.. நிச்சயம்
மறுமை நாளில் உனக்கொரு இடமுண்டு;
அதுதான் அழகிய சுவனப் பூங்கா ..
அல்லாஹ்வின் அருள்மிகு நேசருக்கு
அவன் வழங்கும் சிம்மாசனம் அதுதானே?

- எம்.எஸ். பசீர் அகமது D.F.A.
அடியக்கமங்கலம்

பள்ளிப் பண்

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாஃபீ கல்பீ கய்ருல்லாஹ்
நூரு முஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹா – ஹக்கு
லாயிலாஹா இல்லல்லாஹ்

இறைவா உனது கருணையினால்
.....இம்மை மறுமை பேறுகளைக்
குறையா தெமக்கு கொடுத்திடுவாய் !
.....கொடுமை யனைத்தும் தடுத்திருவாய்
நிறைவாயுள்ள நலன் ஈந்து
.....நெஞ்சம் மலரச் செய்திடுவாய் !
கறையாயுள்ள பகுதிகளைக்
.....கழுவித் தூய்மை யாக்கிடுவாய் !

பிறையாய்த் திகழும் எம்பள்ளி
.....பிறைபோல் வளர உதவிடுவாய் !
நிறைவாம் சீதக்காதி பெயர்
.....நின்றே நிலவும் நிறுவனத்தார்
நிறைவே கொள்ளத் துணைபுரிவாய்
.....நிலைபேறுடைய எம் கொள்கை
குறையா தோங்க அருள் புரிவாய் !
.....குறைகள் தீர்க்கும் கோமானே !

அறிவுக் கடலாம் கஸ்ஸாலி
.....அடையும் நெஞ்சின் விரிவைப்போல்
அறிவின் ஒளியாய் எம்நெஞ்சை
.....அழகாய் அமைப்பாய் அருளாளா !
செறியும் கல்வி எமக்கூட்டும்
.....சீரிய நேரிய ஆசிரியர்
அறியும் பெற்றோர் அனைவருக்கும்
.....அருளைப் பொழிவாய் ரஹ்மானே !

(இயற்றியவர் : பிறைப்பள்ளியின் நிறுவன முதல்வர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர், M.A. அவர்கள்)