Tuesday, January 20, 2009

அருள் புரிவாய்!

ஈமான் உறுதி வன்மையுற
இம்மை மறுமை செம்மையுற
தேமாங் கலிமா இறுதியிலே
தெவிட்டா துரைத்து நன்மைபெற

பூமா மணமே மண்ணறையில்
பொலிய உயிரும் நன்மையுறக்
கோமா னுன்னை வேண்டுகின்றோம்
குறையா தமக்குக் கொடுத்திடுவாய்!

- இறையருட் கவிமணி

கவிஞர் தா. காசீம்

பிறைப்பள்ளிப் பேரரசே! - இந்தப்
பேரரங்கின் கவியரசே!
உரைக்கின்ற கவிகேட்டு
"உரைக்" கின்ற பொறுப்பேற்றீர்!
பேராசி தந்ததென்னைப்
பணித்தமைக்குப் பணிவன்பின்
நன்றி சொல்வேன்

- சமுதாயக் கவிஞர் தா. காசீம்

நீதிபதி மு.மு.இஸ்மாயீல்



பல அருமையான நூல்களை எழுதியுள்ள இறையருட் கவிமணி அவர்களின் சேவை பாராட்டிற்குரியது. இத்தனை நூலகளை ஒருவர் எழுதியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. மனம் சுத்தமாக இருந்தால்தான் நம்மை அறியாமலே சொற்கள் வந்து விழும். அந்த மாதிரிச் சொற்கள் அமைந்த கவிதைகள் இங்கு நிறைய இருக்கின்றன.

அப்பேர்ப்பட்ட ஒரு கவிஞருக்கு - புலவருக்கு - மார்க்க மேதைக்கு இப்பரிசை வழங்குவதில் யாருக்கும் சற்றேனும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. அவர்களுக்குத் தகுந்த, அவர்களது செயலுக்கும் சேவைக்கும் அங்கீகாரம் அளிக்கின்ற முறையில், இந்தப் பரிசினை நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(21.06.1999 ஆம் ஆண்டு சென்னை சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையத்தின் 1999-ஆம் ஆண்டுக்குரிய 'செய்கு சதக்கத்துல்லலாஹ் இலக்கியப் பரிசு' இறையருட் கவிமணி அவர்களுக்கு வழங்கப்பட்டபோது விழாத்தலைவர் மாண்புமிகு நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள் பரிசு வழங்கி ஆற்றிய உரையிலிருந்து)

அபிவை ஜின்னா

பொதிகை மலைச் சாரலிலே
புகுந்து வரும் தமிழ்க் காற்று!
அதிமதுரச் சொற் சிலம்பில்
அகங்குளிரும் அமுத ஊற்று!
புதினச் சொல் புகுந்து வரும்
புதுமைகளின் பூங்காற்று - இது
மதுரகவி கபூரண்ணா
மணித்தமிழின் பூச்செண்டு!

தேன்சிந்தும் எழுத்தாற்றல் - இவரின் ஏற்றம்!
தெய்வீக அருள் சுரக்கும் - இவரின் ஞானம்!
காணுகின்ற காட்சிகளைக் கவியில் காட்டும்!
கருத்தழகு கபூர் மாட்சி - கவிச்சொல்லாட்சி!
வான்சிந்தும் திருமறையில் - வாழ்வைக் காணும்
வற்றாத பேரன்பு - வாஞ்சை மிகு நற்பண்பு!
திருவிதாங்கோடு பெற்ற - தீன் தமிழ்க்கவிஞர் இவர்!
மருவிலா வாழ்வு கண்ட - மாணிக்க மனிதரிவர்!
அப்துல் கபூர் எனும் - அற்புத ஆசான் இவர்!
ஒப்பிலா உயர்வு கண்ட - உன்னத அறிஞர் இவர்!
அப்பப்பா! இவர் மறையின் - ஆதங்கம் அணையவில்லை இவரை
அல்லாஹ் சுவனத்தில் - அகங்குளிர அமர்த்திடுவான்!
அதுவே நம் பிரார்த்தனை - அல்லாஹ்விடம் வேண்டிடுவோம்!!