Wednesday, January 7, 2009

by ஞானம்

Professor Gafoor has been honoured with the title "Iraiyarul Kavimani" (the gems like poet with Divine Grace).

Infact divine grace is the implicit force to learn, read, reflect and at every stage of our life. There is no wonder that the inspiring songs of this scholar will invoke reflective thinking in every one.

I wish that every one should read his poems and derive maximaum pleasure as well as benefit out of them.

I also wish that the scholar should compose a number of similar poems as laurels to his laudable mission of patronising Tamil language and literature.

- A Gnanam
Former Vice - Chancellor of University of Madras

பள்ளி வாசல்

"More things are wrought by prayer than this world dreams of" என்றான் ஆங்கிலக் கவிஞன் ஆல்ப்ரெட் லார்ட் டென்னிஸன். இஸ்லாமியர்களின் தொழுகைத் தளமாக விளங்கும் பள்ளிவாசலுக்கு பொருத்தமான விளக்கத்தை இதைவிட சிறப்பாக யாராலும் சொல்ல இயலுமோ?

உருக வரும் தொழுகையினால்
உத்தமர்கள் சித்திபெற
வருகவென அழைக்கின்ற
வான்சுட்டும் பள்ளிவாசல் !

புவன வாயில் புகுந்தவர்கள்
பூமணக்கப் புகழ்மணக்கச்
சுவன வாயில் நுழைவதற்குச்
சுடர்காட்டும் பள்ளிவாசல் !

ஆத்மீக ஒளிபரப்பி
அகவிருளை ஓட்டுகின்ற
சாத்மீக மின்நிலையம்
சாந்தி வழிப் பள்ளிவாசல் !

முயற்சியினால் இறையவனின்
முத்திரையைப் பெறுவதற்குப்
பயிற்சியினை வழங்குகின்ற
பாசறையே பள்ளிவாசல் !

- இறையருட் கவிமணி

நூல் வரிசை

கவிதை

1. நாயகமே!
2. அன்னை பாத்திமா!
3. நபிமணி மாலை!
4. இறையருட் மாலை
5. நபிமொழி நானூறு
6. பொன்மொழி நானூறு
8. காஜா மாலை
9. பீரப்பா மாலை
10. முஹ்யித்தீன் மாலை
11. தலைப்பா (கவியரங்கக் கவிதைகள்)
12. துஆ - 100 (பிரார்த்தனைப் பாடல்கள்)

உரை நடை

1. இலக்கியம் ஈந்த தமிழ்
2. அற வாழ்வு
3. வாழும் நெறி இஸ்லாம்
4. இஸ்லாமிய இலக்கியம்
5 இனிக்கும் இறைமொழிகள்
6. மிக்க மேலானவன்

குழந்தை இலக்கியம்

1. அரும் பூ

நபிமொழி நானூறு

ஒரு கையில் இறைவேதம்
மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமகென்ன தயக்கம்?
கண்களில் ஏனிந்த கலக்கம்?

என்று பாடுவார் இசைமுரசு நாகூர் E.M.ஹனீபா அவர்கள். 'குர்ஆன்' எனப்படும் இறை வேதமும், 'ஹதீஸ்' எனப்படும் நபிகள் நாயகம் நவின்ற நன்மொழிகளூம் முஸ்லீம்களுக்கு இரு கண்கள் போன்றது.

நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகளை அதன் அர்த்தங்கள் சிறிதளவும் மாறாத வகையில் செந்தமிழில் கவிதை வடிவில் "நபிமொழி நானூறு" என்ற நூல் மூலம் நமக்கு அளித்துச் சென்றவர் இறயருட் கவிமணி அவர்கள்.

அரபி, தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் அன்னார் புலமை பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாயகம் நவின்ற "ஹதீஸ்" பொன்மொழியை எதுகை மோனை சுவைபட இயற்றமிழில் அவர்கள் கையாண்டிருக்கும் முறையை பாருங்கள் :

"கையால் தடுப்பீர் தவறுகளை;
கையா லின்றேல் நாவதனால்;
உய்யா நின்றால் உள்ளத்தால்
ஒறுப்பீர் என்பது நபிமொழியாம்"

அப்துல் கையூம்

by சிற்பி

"அதங்கோட்டாசான்"

அறிவினுக்கு அறிவாய் தெளிவினும் தெளிவாய்த் திகழும் ஆசிரியப் பெருந்தகை கா. அப்துல் கபூர் அவர்களின் செம்மல் உள்ளம் செந்தமிழில் திளைத்திருக்கும் தூய உள்ளம் குழந்தை நலமுடையது.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழுக்குத் தந்த கவிஞர்கள் பலர். அந்தப் பாரம்பரியத்தின் செழும் கிளையாகத் திகழ்பவர் பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள். நாஞ்சில் நாடு முன்னர் ஓர் அதங்கோட்டாசானை நல்கியதுபோல் இன்றும் திருவிதாங்கோடு தந்த "அதங்கோட்டாசான்" நமது ஆசிரியர்.

- சாகித்திய அக்காடமி விருது பெற்ற
"சிற்பி" பால சுப்பிரமணியன்

by ஆளுர் ஜலால்

சிம்மாசனமிட்ட மன்னவர்

சின்ன அரும்புகளின் இனித்த மழையே !
என் நேச இறையருட் கவிமணியே !
பாவைத் துவைத்து என்கள் அக்த்திற்குள்
சிம்மாசனமிட்ட மன்னவா !
சிக்கறுந்த உங்களின் முன்னால் வா சிக்க வந்தேன்,
உங்களின் மெய்ஞ்ஞானப் பாவைப் பாடி.

- 'முஸ்லிம் முரசு' ஆசிரியர் ஆளுர் ஜலால்

முதல் தமிழ் முதல்வர்

தமிழ் நாட்டின் கல்லூரி வரலாற்றில் முதன் முதலில் முதல்வரான தமிழ்ப் பேராசிரியர் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்கள்.

தமிழுக்கு முதலிடம் தந்து தமிழறிஞர்களைக் கெளரவித்ததில் முன்னோடியாக இருந்தது உத்தமபாளையம் ஹாஜி. கருத்த ராவுத்தர் கெளதிய்யாக் கல்லூரி. இக்கல்லூரி நிர்வாகம் 45 ஆண்டுகளுக்கு முன்பே கா.அப்துல் கபூர் என்ற தமிழ்ப் பேராசிரியரைக் கல்லூரி முதல்வராக்கிப் பெருமைபடுத்தியது. தமிழ் நாட்டின் கல்லூரி வரலாற்றில் முதன் முதலில் முதல்வரான தமிழ்ப் பேராசிரியர் அப்துல் கபூர்தான்.

சி.இலக்குவனார், ஏ.சி.செட்டியார், வ.சுப.மாணிக்கம், சுப.அண்ணாமலை, தமிழ்க் குடிமகன் போன்ற பல தமிழ்ப் பேராசிரியர்கள் இதன் பின்னரே கல்லூரி முதல்வராகிப் பெருமை சேர்த்தனர் என்பது எண்ணத் தக்கது.

உத்தமபாளையம் கல்லூரியில் 45 ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வராக இருந்த நேரத்தில், அப்போதைய தமிழக ஆளுநர் திரு. விஸ்ணுராம் மேதி ஒரு மருத்துவமனையத் திறப்பதற்காகக் கம்பம் வந்தார். அந்த நேரத்தில் ஆளுநரின் ஆங்கில உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவர் அப்துல் கபூர். பேராசிரியர் சிறப்பாக உடை அணிந்திருந்ததைக் கண்ட அவ்வூர் மக்கள் இவர்தான் ஆளுநர் என்று பேசக் கூடிய முறையில் மிடுக்கான உடையில் தோன்றியிருந்தார்.

டாக்டர் எஸ்.ஷாகுல் ஹமீது எம்.ஏ., பிஹெச்.டி.ஆய்வு நெறியாளர், தமிழாய்வுத்துறை, புதுக் கல்லூரி, சென்னை-14.

நன்றி : தினமணி 2001, (ஈகைப் பெருநாள் மலர்)

by நாகூர் ரூமி





இறையருட் கவிமணியைப் பற்றி

நாகூர் ரூமி

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமுமோ ரிறையின் இனிய பேர் போற்றி

இந்த இரண்டு வரிகளைப் படித்தவுடன் என் மனதில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷ உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு நன்றியுணர்ச்சி என்றுகூட அதைச் சொல்லலாம். முஸ்லிம்கள் எந்தக் காரியத்தையும் தொடங்கும்போது அரபியில் ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்’ என்று சொல்வார்கள்.’ இறைவனின் பெயரைக் கொண்டு தொடங்குகிறோம்’ என்று பொதுவாகப் பொருள்தரும் அந்த வாக்கியத்தை இவ்வளவு அழகாகக் கவிதையில் பார்த்தபோது, இனி இப்படியேகூடத் தொடங்கலாம் என்று தோன்றியது. இந்த இரண்டு வரிகளும் மார்க்கப் பற்று மிகுந்த ஒரு கவிஞரை எனக்கு அடையாளம் காட்டின.

அந்த அறிஞர்தான் ‘இறையருட் கவிமணி’ என்ற புகழ்ப்பெயருடன் அறியப்படும் கா.அப்துல் கபூர். அவரைப் பற்றிய சாகித்திய் அகாதெமியின் வெளியீடு இந்த நூல்.

அதை முழுவதும் படித்துப் பார்த்தபோது சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த மதிப்புரையின் நோக்கம்.
பேராசிரியர்,எழுத்தாளர், கவிஞர், குழந்தை இலக்கியம் படைத்தவர், கல்வியாளர், பேச்சாளர், மார்க்க அறிஞர், பக்தி இலக்கியகர்த்தா, பத்திரிகையாளர், பன்மொழி வல்லுணர் என பன்முகம் பளபளக்கும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஒளிர்ந்த அவர்திருவிதாங்கோட்டில் 1924ல் பிறந்து 2002ல் மறைந்தவர்.

1946ல் இருந்து 67வரை சென்னை, வாணியம்பாடி, திருச்சி, உத்தம பாளையம், அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்த கல்லூரிகளில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும், முதல்வராகவும், கீழ்த்திசை மொழித்தலைவராகவும் இருந்திருக்கிறார். 1967க்குப் பிறகு வண்டலூர் பிறைப்பள்ளி முதல்வராகவும், கும்பகோணம் அல் அமீன் உயர் நிலைப்பள்ளி நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், சென்னைப் பல்க்லைக்கழக செனட் உறுப்பினராகவும், கேரளப் பல்கலைக்கழக் பாடநூல் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.
உர்து முஷாயிரா பாணியில் முதன் முதலாக தமிழ்க் கவியரங்கை வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 1948ல் அறிமுகம் செய்து வைத்தவர் என்ற பெருமையும், முதன் முதலாக ஒரு கல்லூரியின் முதல்வாராகப் பொறுப்பு வகித்த தமிழ்ப் பேராசிரியர் (ஹாஜி கருத்த ராவுத்தர் கௌதியா கல்லூரி, உத்தமபாளையம்) என்ற பெருமையும் இவரையே சேரும்.

முன்னாள் ஆளுனர் பி.சி.அலெக்சாண்டர், மதியழகன், பேரா.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் இவரோடு உடன் பயின்ற மாணவர்கள். கலைமாமணி மணவை முஸ்தபா, சிற்பி,சாதிக் பாட்சா போன்றோர் இவருடைய மாணவர்கள். பன்னிரண்டு கவிதை நூல்களும் ஆறு உரைநடை நூல்களும் எழுதிய இவர் குழந்தை இலக்கியத்தில் பாரதிக்கும், பாரதிதாசனுக்கும், கவிமணிக்கும் அடுத்த இடத்தில் இருப்பவர். ‘அரும்பூ’ என்ற குழந்தைகளுக்கான பாடல்களின் தொகுப்பு இவருக்கு அந்த புகழைக் கொடுக்கிறது.

நண்பன் என்ற கையேட்டுப் பிரதியில் முதல் கவிதை எழுதி இலக்கிய வாழ்வைத் துவக்கிய இவர், பின்பு ‘மதிநா’ என்ற ஒரு மாத இதழை சிறப்பாக நடத்திக்காட்டினார். ‘மதிநா’ என்ற பெயர் முஹம்மது நபியவர்கள் அடக்கமாகியுள்ள புனித நகரான மதினாவைக் குறிப்பதாகவும் மதி, நா ஆகிய இரண்டையும் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டது அதன் சிறப்பு. இந்த இதழின் மூலமாகத்தான் தோப்பில் முகமது மீரானின் படைப்புகள்பிரபலமடைந்தன.

உரை நடை நூல்கள்

‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற இவருடைய நூல் சென்னை, அண்ணாமலை மற்றும் கேரள பல்கலைக்கழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. பதினோரு தலைப்புகளில் வானொலிஉரைகளாக பேசப்பட்டதன் தொகுப்பே இது. அராபியர்கள் இந்தியாவைக் குறிக்க ‘ஹிந்த்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இந்திய நாட்டின் புளி அவர்களுக்கு அவர்களுடைய நாட்டின் பேரீச்சம் பழத்தை நினைவு படுத்தியதால் அதை அவர்கள் ‘தமருல் ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர். அதுவே ஆங்கிலத்தில் ‘டாமரிண்ட்’(tamarind) என்று ஆனது! இதுபோன்ற பல அரிய, ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

அறவாழ்வு, வாழும் நெறி இஸ்லாம், இஸ்லாமிய இலக்கியம், இனிக்கும் இறைமொழிகள், மிக்க மேலானவன் ஆகியவை இவருடைய மற்ற கட்டுரைத் தொகுப்பு நூல்களாகும்.

‘இஸ்லாமிய இலக்கியம்’ என்ற நூலில் தமிழ் மற்று அரபி மொழிகள் பற்றிய கட்டுரையும் முகலாய ஆட்சியாளர்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

‘வாழும் நெறி இஸ்லாம்’ என்ற நூல் இவருடைய பல்வேறு சொற்பொழிவுகளின் தொகுப்பு. இதிலும் அரபி மொழி பற்றிய ‘வையகம் போற்றும் வான்மொழி’, ‘அறிவுத் துறையில்முஸ்லிம்களின் பங்கு’, ‘பாரகம் போற்றும் நூலக முன்னோடிகள்’ ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
திருக்குர்ஆனின் வசனங்களுக்குத் தெளிவுரையாக அமைந்த 21 கட்டுரைகளின் தொகுப்பு ‘இனிக்கும் இறைமொழி’ என்ற நூல்.

தன் இறுதி நாட்களில் திருக்குர்ஆனுக்கு இவர் எழுதிய விளக்கக் கட்டுரைகள்தான் ‘மிக்க மேலானவன்’ என்ற நூலாக உருப்பெற்றது. இவருடைய விசாலமான அறிவையும் ஆழமான பார்வையையும் உரை நடையையும் கவிதா நடையாக அமைக்கும் திறனையும் இவருடைய எல்லா படைப்புகளிலும் நாம் காணலாம்.

சிறுவர் இலக்கியம்

இவர் நடத்திய ‘மதிநா’ இதழில் ‘சிறுவர் சோலை’ என்ற பகுதியில் அபூஜமால் என்ற பெயரில் இவர் எழுதிய குழந்தைப் பாடல்கள்தான் பின்னர் ‘அரும்பூ’ என்ற பெயரில்தொகுக்கப்பட்டது. இப்பாடல்கள் குழந்தைக்ள் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டன. கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ரப்பர் எஸ்டேட்டில் குழந்தைகளின் திற்னைச்சோதிக்கும் இரண்டு நாள் நிகழ்ச்சியொன்றில் விருந்தினராகக் கலந்து கொள்ள எழுத்தாளர் தோப்பில்முகமது மீரான் சென்றிருந்தபோது, ஒரு குழந்தைப் பாடலைச் சொல்லி இதை எழுதியது யார் என்று கேட்டபோது, ‘இறையருட் கவிமணி கா.அப்தில்கபூர்’ என்று ஒரு தொழிலாளியின் குழந்தை பதில் சொன்னதை தோப்பில் பதிவு செய்திருக்கிறார்!

‘இறைவா உனக்கோர்
இணையே இல்லை
நிறைவே தருவாய்
நேர்வழி காட்டுவாய்
நல்லவை செய்யும்
நாட்டம் நல்குவாய்
அல்லவை தவிர்க்கும்
ஆற்றல் தருவாய்


என்று துவங்கும் ‘இறைவா’ என்ற முதல் பாடல் மழலைகளின் உள்ளத்தில் நல்ல விதைகளை எளிதாக விதைத்து விடுகிறது.

கணிதம் கற்றுக்கொடுக்கும் பாடல்களில்கூட, கணிதத்தோடு கருத்தையும் கற்றுக்கொடுக்கிறார்:

எண்ணத் தொடங்கு ஒன்று
என்றும் இறையை ஒன்று!
ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒளிரும் கண்கள் இரண்டு!


‘மாலை மாற்று’ என்று கூறப்படும் சொற்களைத் திருப்பிப் படித்தாலும் அதே பொருளைத் தரும் வரிகளை உள்ளடக்கிய பாடல்களையும் எழுதி சோதனை செய்துள்ளார்:

வாத மாதவா
தேனு மீனுதே
மோக ராகவா
மோரு தீருமோ
யானை சேனையா
வாடி ஆடிவா


அலைவதினாலே அலையாகும்
திரள்வதினாலே திரையாகும்


என்று காரண காரியத் தொடர்பை உணர்த்தும் வகையிலான பாடல்களும் எழுதியுள்ளார். இதேபோல, ஆங்கிலத்தில் ‘ஹோமோனிம்ஸ்’(homonyms) என்று சொல்லப்படும் ஒலி வடிவம்ஒன்றாகவும், வரி வடிவம் வேறாகவும் இருக்கும் சொற்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்களை எழுதியுள்ளார்:

ஆற்றின் ஓரம் கரையாகும்
ஆடையில் படுவது கறையாகும்
காட்டில் கொல்வது புலியாகும்
வீட்டில் கொள்வது புளியாகும்


புதிர்கள்,கதைகள் என பல்வேறுபட்ட வடிவங்களில் இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் நாட்டின் பள்ளிகள் தோறும் இப்பாடல்களைப் பாடமாக வைத்தால் நம் குழந்தைகள் நிச்சயம் விரைவாகப் பயனடைவர்.

மாலை இலக்கியம்

இறையருள் மாலை, திருமறை மாலை, நபிமொழி மாலை, நாயக மாலை, நபிமணி மாலை, பாத்திமா மாலை, காஜா மாலை, முஹ்யித்தீன் மாலை என ஏராளமான புகழ்ச்சிப் பாக்கள் அடங்கிய தொகுப்பு இது. இவற்றின் பெரும்பகுதி நாகூர் ஈ.எம்.ஹனிபாவால் பாடப்பட்டு புகழடைந்தவை.இசைத்தட்டில் கம்பீரமாக ஒலித்த இப்பாடல்கள் பாமரர்களின் இதயத்தினுள் சென்று இடம் பிடித்தன.

ஆதியருள் கனிந்திறங்கி
அமரர் கோன் வழியாக
நீதிநபி மாமணிக்கு
நிறைவளித்த திருமறையாம்


என்று தொடங்கும் திருமறை மாலையின் பாடலும் நாகூர் ஹனிபா பாடியதுதான். ஹஸ்பீரப்பீ ஜல்லல்லாஹ், அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன், ஆளும் இறைவன் தூதர்நபி, விண்ணகமும் மண்ணகமும், அருளாளன் அன்புடையோன் ஆகியவை மேலும் சில உதாரணங்கள்.

நல்ல தமிழில், அழகு தமிழில் பிரவாகம் போலப் பேசும் வல்லமை படைத்த இவர் இடுக்கன் வருங்கால் நகுக எனும் வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப, துன்பம் வந்தபோதும்கூடநகைச்சுவை உணர்வோடு பேசியிருக்கிறார். மூட்டு வலியால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தபோது ஒரு நண்பர் இவரிடம், எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிலேடையாக, ‘உடம்பில் முக்கால் பாகம் நன்றாக இருக்கிறது. கால் பாகம்தான் நன்றாக இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார்!

அற்புதமான படைப்பாற்றல் கொண்டவராகவும், சரியான ஆன்மீக வாதியாகவும், நல்லாசிரியராகவும் செயற்கரிய சேவைகள் பல செய்த இந்த மாமனிதரை, சமுதாயம் அடையாளம் காண வேண்டியது காலத்தின் க்ட்டாயம். இவரைப்போல எத்தனைபேர் அறியவேண்டிய விதத்தில் இன்னும் அறியப்படாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை.

இறையருட் கவிமணியை அடையாளம் காட்டிய பேராசிரியர் நத்தர்சாவும், அடையாள கண்டுகொண்ட சாகித்திய அகாதெமியும் நிச்சயம் நமது பாராட்டுக்கு உரியவர்கள்.

- நாகூர் ரூமி -

என் ஆசான் - அப்துல் கையூம்


(முன் வரிசையின் நடுவில் உட்கார்ந்திருப்பவர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர். அவருடன் பிறைப்பள்ளியின் முதல் அணிவகுப்பு மாணவர்கள். பின்வரிசை வலதுகோடியில் கட்டுரை ஆசிரியர் அப்துல் கையூம்)

“அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ்”

திருவிதாங்கோடு ஈந்த தீந்தமிழ்ப் பாவலனை என் ஆசான் என்று கூறிக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து வரும் அவரது கன்னித்தமிழை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாவேந்தனின் பாடலை மெய்ப்பிக்கும் வகையில் அவரது தீந்தமிழ்ப்பேச்சில் தேன்பாகு போன்ற ஒரு இனிமை கலந்திருக்கும்.

இன்று ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக கிளைகள் படர்ந்து வண்டலூரில் இயங்கி வரும் கிரசென்ட் பள்ளியின் வரலாற்றுப் பின்னணியை இங்கே நினைவு கூறுவது அவசியம்.

1969-ஆம் ஆண்டு என்னையும் சேர்த்து 19 மாணவர்களின் எண்ணிக்கையுடன் துவங்கப்பட்ட பள்ளி அது. பிறைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட முதல் அணிவகுப்பு நாங்கள். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஹாரிங்டன் சாலையில் “நமாஸி வில்லா” என்ற வாடகை வீட்டில்தான் இந்த சுடர்மிகு விடியல் துவங்கியது. ‘காயிதே ஆஸம்’ முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா இக்பால் போன்ற பெருந்தலைவர்கள் தங்கிச் சென்ற ஒரு பணக்கார குடும்பத்தின் இல்லம் அது.

பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் என்ற ஒரு மாமனிதரை எங்கள் பள்ளிக்கு முதல்வராக பெற்றது நாங்கள் செய்த அரும்பெரும் பேறு என்றுதான் கூற வேண்டும். அந்த இல்லத்தில் ஒரு பகுதியில்தான் பேராசிரியரின் குடித்தனம். தன் அன்புத்துணைவியார் மற்றும் அருமை மைந்தன் ஜமால் முகம்மதுடன் வசித்து வந்தனர். அந்த அம்மையாரின் கைப்பக்குவத்தில் தயாராகும் அறுசுவை பண்டங்களை பலமுறை சுவைபார்த்த பாக்கியம் என் நாவுக்குண்டு.

ஆறாம் வகுப்பு முதல் மெட்ரிக் வரை - ஆறு ஆண்டுகள் - அந்த மனிதருள் மாணிக்கத்தின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அது ஒரு குருகுல வாசம் போன்ற அமைப்பு. இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு தமிழ்க்கடலின் அருகாமையில் இருந்துக்கொண்டு தமிழ்ச்சுவையை பருகிய அனுபவங்களை எழுத்தினில் வடிக்க இயலாது. அரிய மார்க்க ஞானங்களை அவரிடமிருந்து நாங்கள் பெற முடிந்தது.

ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள். கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில் “மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.

அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்து எங்களை ஊக்குவித்த மற்றொரு ஆசான் புலவர் நாஞ்சில் ஷா அவர்கள். ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை வழங்கியவர். நாஞ்சில் ஷாவின் மாண்பினை கவியரசு கண்ணதாசன் இவ்வாறு புகழ்ந்தார்.

“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;


எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”

இவ்விரண்டு நாஞ்சில் நாட்டு நற்றமிழ் நாவலர்களின் நாவாற்றலில் நான் நனைந்து மகிழ்ந்த நாட்களை நினைவு கூறுகையில் என் நெஞ்சமெலாம் தேனாய் இனிக்கும்.

கல்லூரி முதல்வர் பதவியை துறந்து விட்டு எங்களைப் போன்ற பிஞ்சு மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பேராசிரியரை “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்றே பலரும் விமர்சித்தனர். அதை அவர் ஒரு பதவி இறக்கமாகவே கருதவில்லை. அதற்கு மாறாக எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயல்பட்டார்.

“உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்
அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்
பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்
இறையருட் கவிமணி உள்ளம் !


அதனாலேதான் ..
கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து
அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென
பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை
நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார்.”

பேராசிரியரின் மனோபாவத்தை அறிந்து மனதாரப் புகழ்ந்த அவரது ஆத்மார்த்த ரசிகர் கபூர்தாசனின் வரிகள் இவை. இதனை எழுதிய கவிஞருக்கும் பேராசிரியருக்கும் ஏற்பட்ட ஒரு தெய்வீக நட்பை இங்கே விவரித்தே ஆக வேண்டும். இலக்கிய ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய சுவையான நிகழ்வு இது. கபிலர் பிசிராந்தையாருக்கிடையே இருந்த நட்புக்கும், ஒளவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்புக்கும் இணையானது இந்த இலக்கிய பிணைப்பு,

பள்ளி அரையாண்டு விடுமுறையின்போது நான் என் சொந்த ஊர் நாகூர் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பேராசிரியர் என்னை அழைத்தார்கள். அவர்கள் வசம் கத்தை கத்தையாக கடிதங்கள் இருந்தன. பேராசிரியரின் கவிநடையில் காதல் ஏற்பட்டு மனதைப் பறிகொடுத்த ஒரு ரசிகரின் மடல்கள் அது. பேராசிரியரின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போய் மதுவுண்ட வண்டாய் ரீங்காரமிடும் கவிநயம் சிந்தும் காதல் கடிதங்கள் அவை. நாளடைவில் இந்த இலக்கியக் காதல் முற்றிப்போய் தன் இயற்பெயரை மாற்றி “கபூர் தாசன்” என்று மாற்றி கொண்டார் அந்த ரசிகர்.

“தம்பி! நீ உன் ஊருக்கு அருகாமையிலிருக்கும் காரைக்காலுக்குச் சென்று இந்த முகவரியில் இருக்கும் நபரைச் சென்று சந்தித்து வா!” என்று என்னை பணித்தார்கள். நான் நேரில் சென்று விசாரித்தபோது அந்த வாசகரின் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர் என்று தெரிய வந்தது. நான் கபூர் சாகிப்பிடமிருந்து வந்திருக்கும் மாணவன் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை பார்க்க வேண்டுமே! தன் ஆத்மார்த்த நாயகனிடமிருந்து வந்த தூதுவனாக என்னைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ச்சிவசப்பட்டுப் போனார். பேராசிரியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அவரது சொல்லாற்றலைப் புகழ்ந்து மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டார். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசனைப் போன்று, அந்த பாரதிதாசனுக்கும் ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் (சுரதா) போன்று இந்த கபூர்தாசனின் குருபக்தி கண்டு வியந்துப் போனேன்.

பிறைப்பள்ளியில் எங்களுக்கு தமிழ் பாட வகுப்பு முதல்வரே நடத்துவார். தமிழ் வகுப்பு என்றாலே எங்களது உற்சாகம் பன்மடங்காகும். அந்த கம்பீரத் தோற்றம், அடுக்குத் தொடரில் அதறும் தொனி, அடலேறு போன்ற ஒரு மிடுக்கு, கடல் மடை திறந்தாற்போல் ஊற்றெடுக்கும் அந்த அருந்தமிழ் நடை, கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்.

“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையன்”
- என்று சடையப்ப வள்ளலைப் புகழும்போதும்

“உமறு குமுறிடில் அண்ட முகடும் படீரென்னும்
உள்ளச்சம் வையும் பிள்ளாய்”
- என்ற உமறுப் புலவரின் உரையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் போதும் சிங்கத்தின் கர்ஜனையை கேட்பது போலிருக்கும்.

தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாக் கதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் -


என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு. பேராசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுவார் :

“திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!

எங்கள் முதல்வர் எழுதி நாங்கள் தினமும் இறைவணக்கப் பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது. நாகூர் ஹனீபா அவர்கள் ஐந்து மாணவர்களைத் அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’) பாட தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஐந்து மாணவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமையைச் சேர்த்தது. “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது.

“இம்மை வாழ்வின் சோதனையில்
இதயப் பொறுமை தந்திடுவாய் !
வெம்மை நெருப்பை விட்டெம்மை
விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !
செம்மை பொழியும் சுவனத்தின்
செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !
எம்மை நல்லோர் நற்குழுவில்
என்றும் சேர்ப்பாய் இனியோனே !”

என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன. “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.

தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.

தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இறையருட் கவிமணி அவர்கள் பன்மொழியில் புலமை பெற்றிருந்தார்கள். தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர்கள் அடைந்திருந்த திறன் அளவிடற்கரியது. தக்கலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் நிறுவி இறுதி மூச்சுவரை இலக்கியத் தொண்டாற்றி வந்தார்கள்.

பலகாலம் முன்பு ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:

ஈகைத் திருநாள்
இன்பம் தருக;
இறையருள் பொழிக !

அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

- அப்துல் கையூம்


பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு By முதுவை ஹிதாயத் on May 22nd, 2008

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் 21.05.2008 புதன்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக்கூடத்தில் ‘இஸ்லாத்தில் அறிவியல் கண்ணோட்டம்’ எனும் தலைப்பில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

துவக்கமாக காயல் மௌலவி முஹம்மது சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி இறைவசனங்களை ஓதினார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் குறித்த அறிமுகவுரையினை நிகழ்த்தினார்.
இறையருட்கவிமணி பேராசிரியார் கா. அப்துல் கபூர் சாஹிப் அவர்களின் சகோதரர் ஆவார் இவர் என்றார். அவர் ஆற்றியுள்ள பல்வேறு கல்விச் சேவைகள் குறித்து விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புச் சொற்பொழிவாளரான பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பேராசிரியர் கா. அப்துல் கபூர் சென்னை அரசினர் கல்லூரியாக இருந்து, முஹம்மதன் கல்லூரியாகி இன்று காயிதெமில்லத் பெண்கள் கல்லூரி என அழைக்கப்படும் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவராக இருந்த போது அறிஞர் அண்ணா அவர்களை அழைத்து இலக்கிய நிகழ்ச்சி நடத்தினார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருந்த நேரம். அறிஞர் அண்ணாவை உள்ளிட்ட திமுக பிரமுகர்களை கூட்டத்திற்கு அழைக்க அச்சப்பட்ட காலத்தில் இதுபோன்ற நிகழ்வை நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் கபூர் அவர்களை நீக்கியது.

அதனைத் தொடர்ந்து வானம்பாடிகளின் கூடாரமாக விளங்கிய வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி கபூர் சாஹிபை அரவணைத்துக்கொண்டது. அங்கும் அறிஞர் அண்ணாவை அழைத்தார். அப்பொழுது அண்ணா அவர்கள் கபூர் சாஹிப் செல்லுமிடமெல்லாம் என்னை அழைப்பார். அதனைத் தொடர்ந்து கல்லூரியை விட்டு அகற்றப்படுவார் என்றார். வாணியம்பாடியில் உருது கவியரங்கங்கள் நடப்பது வழக்கம். இதன் தொடர்ச்சியாக தமிழில் கவியரங்கங்களை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் கபூர் சாஹிப்.

இறையருட்கவிமணி எனும் பட்டம் வழங்கிய அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியில் நானும், எனது சகோதரர் கபூர் சாஹிபும் சேர்ந்தோம். அப்பொழுது வண்டலூர் பிறைப்பள்ளியை உருவாக்கிய கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் கபூர் சாஹிபை பிறைப்பள்ளி நிர்வாகப் பொறுப்பேற்க அழைத்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

இஸ்லாம் இந்தியாவில் அரேபிய வணிகர்கள் மூலம் பரவிய விதத்தை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தென் பாண்டிச் சீமையாம் இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டணம், தொண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இஸ்லாம் பரவியது. இதனை திருமூலர் ஓரிறைக்கொள்கை என முழங்கி வந்தார்.

அறிஞர் அண்ணா தஞ்சை கூட்டத்தில் பேசிய உரை வீச்சுக்களை நினைவு கூர்ந்த பேராசிரியர் திராவிட கொள்கை ஏக இறைவனை அடிப்படையாகக் கொண்டது தான். இறைவனை மறுப்பதல்ல என்றார்.

அபிவிர்த்தீஸ்வரத்தில் பேசிய அண்ணா 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியக் கூட்டங்களில் பேசியுள்ளேன். இந்த நாடு எங்களை கூட்டத்தில் அழைத்து பேச அச்சப்பட்ட நேரத்தில் இஸ்லாமியத் தோழர்கள் எங்களுக்கு தளம் அமைத்துக் கொடுத்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் தான் தொப்பி அணியாத முஸ்லிம் என்றும், சிலுவை அணியாத கிறிஸ்தவன் என்றும் குறிப்பிட்டார்.

இஸ்லாம் ஒரு அறிவுக் கருவூலமாக திகழ்ந்தது. இதன் காரணமாக போப் ஒருவர் பாக்தாத் மற்றும் ஸ்பெயின் நூலகத்துக்கு வருகை தந்து தனது அறிவுப் பசியைப் போக்கிக் கொண்டார். வில்லியம் என்பவர் பெருமானாரின் கருத்துக்களான கற்பவராக இரு, கற்றுக் கொடுப்பவராக இரு, கற்பவருக்கு உதவுவராக இரு போன்றவற்றை கேட்டு மெய்ச்சிலிர்த்தார்.

இன்று அமெரிக்க வணிகத்திற்கு அச்சுறுத்தலாகத் திகழும் சீனர்கள் அக்காலத்தில் பெருமானாரைச் சந்தித்து தங்களது கலைப் பொருட்களை வழங்கினர். அவர்களது ஞானத்தை அறிந்த நபியவர்கள் ‘சீனம் சென்றேனும் சீர் கல்வி தேடு’ என்ற கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

ஆண்,பெண்களுக்கு கல்வியைக் கட்டாயமாக்கிய மார்க்கம் இஸ்லாம். பெண்களுக்காக கீழக்கரை தாசிம் பீவி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா, காயல்பட்டணம் வாவு வஜீஹா, திருச்சி அய்மான் உள்ளிட்ட கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வில்லியம் ஊரே திருக்குர்ஆன் ஒரு அப்பழுக்கற்ற வேதம் என்கிறார். காயல் நகரில் பயிலும் மாணவர்கள் படிக்கும்போதே திருக்குர்ஆனை மனனம் செய்து கல்லூரியில் ரமளானில் தொழுகை நடத்துகின்றனர். இதன் காரணமாக பல்வேறு உயர்நிலையை அடைகின்றனர்.

இஸ்லாம் கணிதம், மருத்துவம் உள்ளிட்ட அறிவுலகத்திற்கு முன்னோடியாக விளங்கியுள்ளது வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வர். காந்திஜி அவர்கள் அறிமுகப்படுத்திய கதராடைக்கு முன்னோடி இஸ்லாமிய மார்க்கம். இப்படி இஸ்லாத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத ஒன்று என்று கூறினார்.

நிகழ்ச்சியினை முஹம்மது மஹ்ரூப் தொகுத்து வழங்கினார். கபூர் சாஹிப் 'மதி நா' என்னும் மாத இதழை நடத்தி வந்தவர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.