Thursday, February 5, 2009

நீர் வீழ்ச்சி



"இதென்னடா இது?
அந்தப் பாறை முகடுகளில்
தண்ணீரைத் துவைத்துக்
காயப்போட்டது யார்?

* * *

இங்கென்ன
தண்ணீர் முத்துக் குளிக்கிறதா?

இது என்ன
வானுக்கும் பூமிக்கும்
வைர நெசவா?

அது என்ன
தற்கொலை புரியும் தண்ணீருக்கு
அத்தனை ஆனந்தமா?"

என்று நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகை தன் அபரிதமான கற்பனையில் அருமையாகச் சொல்லப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் வரிகளைப் படித்து ஆனந்தமடைந்தேன்.

"கவிதையிற் பேசிய காவலர்கள்" என்ற இறையருட் கவிமணியின் கட்டுரையில் இதுபோன்ற ஒரு அழகிய வருணனையை நாம் காணலாம். முகலாயக் கவிப்பேரரசி ஜெய்புன்னிஸாவின் கவிதை ஒன்றை இறையருட் கவிமணி அவர்கள் இவ்வாறு மொழி பெயர்க்கின்றார் :

" நீர் வீழ்ச்சியே!
யாருக்காக நீ கவல்கிறாய்?
யாருக்காக நீ தலையைத்
தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறாய்?
என்னைப் போல் இரவனைத்தும்
தலையைப் பாறைகளில்
முட்டி மோதிக் கொண்டு
அழுவதற்குக் காரணமான
உன் துயர்தான் யாது?"

அற்புதமான இக் கற்பனை நம்மை பரவசப்படுத்துகிறது அல்லவா?

இவரது மாணவர்களில் சிலர்

பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் மாணவர்களாய்த் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்கள்:

1. கவிஞர் 'சிற்பி' பாலசுரமணியன் - சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர், கோவை பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவாராக பணீயாற்றி ஓய்வு பெற்றவர்.

2. கலைமாமணி மணவை முஸ்தபா - யுனெஸ்கோ கூரியர் ஆசிரியர்

3. திரு. சாதிக் பாட்சா - திராவிடக் கழக முன்னோடிகளில் ஒருவர், முன்னாள் தமிழக அமைச்சர்

4. பேராசிரியர் எம்.ஏ.அப்துல் காதர் - அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வரும், இந்நாள் தமிழ்த்துறை தலைவருமாக இருப்பவர்

5. திரு. நடராசன் - உச்ச நீதி மன்ற குற்றவியல் வழக்கறிஞர்

6. திரு. மு. கண்ணன் - சென்னை விமான நிலைய முன்னாள் துணை கலெக்டர்

7. பேராசிரியர் இரத்தின நடராசன் - ஐ.ஆர்.எஸ். பள்ளிசாரா மாணவர் கல்விக் கருவூல இயக்குனராய்ப் பணியாற்றியவர்

மூன்றாம் முஸ்லிம் தமிழ்ப் பேராசிரியர்

கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதாக இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி முன்னாள் முதல்வரும், தமிழறிஞருமாகிய கேப்டன் அமீர் அலி குறிப்பிடுகிறார்.

"திருச்சி கிறித்துவக் கல்லூரி ஒன்றில் புலவர் பிச்சை இபுறாகீம் பணியாற்றினார். அவர்தான் முதல் முஸ்லிம் தமிழ்ப் பேராசிரியர். இரண்டாவதாக, அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பணீயாற்றினார் பேராசிரியர் அப்துல் காதர். மூன்றாவதாக, இறையருட் கவிமணி".

[தகவல் : முனைவர் ஹ.மு.நத்தர்சா]

அதிரையில் கல்விப் பணி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதர் முஹ்யத்தீன் கல்லூரியில் 1962 முதல் 1967 வரை தமிழ்த் துறைத் தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார் கா. அப்துல் கபூர்.

அவர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த திரு. நெ.து. சுந்தரவடிவேலு பங்கேற்றார். முதல்வரின் வரவேற்புரையால் கவரப்பட்ட நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் தான் ஆற்றிய உரையில்,

"நான் எத்தனையோ அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். இன்று உங்கள் முதல்வர் நிகழ்த்திய சொற்பொழிவைப் போன்று வேறெங்கும் கேட்டதில்லை. மனம்விட்டுச் சொல்கிறேன். சிறிது கூட தடையில்லாமல் சரளமாகவும் வேகமாகவும் எப்படி அவரால் பேச முடிகிறது என்று வியந்து போனேன். தமிழ் பேச்சாளர்களில் உங்கள் முதல்வரின் பேச்சு தனிப்பாணி; அவரது மொழியழகும் சொல்லழகும் நடையழகும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன " என்று புகழ்ந்துரைத்தார்.

[ஹ.மு.நத்தர்சா எழுதி சாகித்திய அகாதெமி வெளியிட்ட "இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்" என்ற நூலிலிருந்து]