Monday, January 19, 2009

ஹ,நசீருத்தீன்

இறையருட் கவிமணி
நிறை வாழ்வு
வாழ்ந்தவர்.

அஞ்சுவன்னச்
சோலையில்
கொஞ்சும்
தமிழ்க்கிளி.

கவிதைகளை
கருக்கொண்ட
கார்மேகம்.

மழையாய்ப்
பொழியும்
சொல்லாற்றல்.

அமுதச் சுவைகாட்டும்
அற்புதக்
கவியாற்றல்.

பூமான் நபிமீது
புகழ்ப்பா பொழிந்த
பொன்கரத்துப்
புதையல்!

பளிங்கைப் போல்
எளிய நெஞ்சகம்.
முத்தமிழில்
வித்தை காட்டியவர்.

எளிய தமிழுக்கு
வித்து ஊன்றியவர்.

அறியாமைக்கு எதிரான
குத்தீட்டி
உயர்ந்த
சுவனத்துச் சோலையில்
கொள்கைப் பறவையாய்ச்
சிறகு விரிக்க
என் துஆக்கள்!

ஹ. நசீருத்தீன்
திருவிதாங்கோடு

கவிஞர் மு.மேத்தா



இறையருட் கவிமணி! இலக்கிய மாமணி!
அப்துல் கபூரை அறியார் எவருளர்?
கம்பீரமான கவிதைக் குயில் அது!
களங்கமில் லாத பெளர்ணமி நிலவது!
வண்ணத் தமிழ்ப் பயிர் வளர்த்த வயலது!
செருநர் நடுங்கிய செந்தமிழ்ப் புயலது!
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதிபோல்
உருவமும் உள்ளம்போல் ஓங்கி உயர்ந்தது!
இதயங் கவரும் எழுத்தாளர் அவர்!
பேராற்றல் பெற்ற பேச்சாளர் அவர்!
அன்னைத் தமிழுக்கும் ஆண்டவன் பணிக்கும்
தன்னை அர்ப்பணித்த தமிழ்ப்பே ராசான்!
திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!!

கவிஞர் சாது

ஓரிறைத் தத்துவ உணர்வுகளை
ஓதிய திருமறைக் கொள்கைகளை
பேரிறைத் தூதரின் போதனையைப்
புரிந்திடச் செய்த கவிமணியே!

இலக்கிய உலகின் மேம்பாட்டை
இஸ்லாம் தந்த வழிபாட்டை
உலகம் போற்றும் நெறிகளிலே
உறுதி யாக்கிக் காட்டியவர்!

மோனை எதுகை மோதிவரும்
முத்தமிழ் மொழியின் பல்சுவையும்
தானே படித்துத் தெளிகின்ற
தமிழாய்ச் செதுக்கித் தந்தவரே!

எழுத்தும் பேச்சும் மணம்வீசும்!
எல்லோர் நாவும் புகழ்பாடும்!
அழுத்தம் நிறைந்த தன்மான
ஆற்றல் ஞானம் பெற்றவரே!

திருவை மண்ணின் புகழுக்குத்
தேன்தமிழ் அப்துல் கபூரவரின்
பெருமை மிக்க பிறப்பென்றும்
பேசப் படுமே சிறப்போடு!

உலகம் காக்கும் பேரிறையே
உயர்கவி யாத்த கவிமணியின்
நலமார் மறுமை வாழ்வுக்கு
நற்றுணை புரிந்திடு அல்லாஹூ!