Thursday, September 24, 2009

ஆணிவேர்

இறையருட் கவிமணி – என்
இதயத்தின் ஒளிமணி !

சொல்லும் செயலும்
விரலும் ரேகையுமாய் விளங்கிய வித்தகர் !

நாக்குத் திரியில் மறைச்சுட ரேந்தி
தீனெறி காட்டிய மனித விளக்கு

பாதத்தை இவர்கள் நடத்திய முறையிலும்
‘இபாதத்தை’யே காண முடிந்தது !

எழுத்துக் களிலும் இறை வணக்கமே
இலங்கச் செய்த இறைமை ஞானி !

இவர்களின் எழுத்துக்கள் –
வெள்ளைத் தாள்களை ‘முஸல்லா’ வாக்கி
நேர்க் கோடுகளில் – தம்
தொழுகையின் ‘சப்’பை நிறுவிக் கொண்டவை !

இவர்களிம் வியப்புக் குறிகளில் –
இறக்கே செலுத்தும் ‘இஃதிதால்’ இருக்கும் !

இவர்களின் கேள்விக் குறிகளும் –
இறையொரு வனுக்கே ‘ருகுவு’ச் செய்வன !

வாய்மை என்னும்
வெண்டளைகளால் விரவப் பட்ட
இவர்களின் வெண்பா வாழ்வு
முற்றிலும் இறைக்கே ‘ஸுதாய்’ அமைந்தது !
ஏகத் துவமே இவர்கள் வாழ்வின்
‘கஃதா’ வானது !

இறையச் சத்தால் உதறும் இவர்களின்
எழுது கோலின் மைத்துளிகள்
என்னில் கூடக்
கவித் துவத்தைக் கருக்கொள்ள வைத்த
ஆன்மத் துளிகள் !

இவர்களின்
சந்த மகரத்தால் பூப்பெய்தி
காய்த்துக் குலுங்கும்
கிளுவைக் கனிகள் – என் கவிதைகள் !

‘தேமாங்கனி’ யாய்த் தெவிட்டா தினிக்கும்
நாமம் கொண்ட இந்த
அபூ ஸையிதின் குதிரைச் சாணமாய்
என்னை நானே ஆக்கிக் கொண்டதால்

அகிலும் கோங்கும் சந்தன வகைகளும்
வீற்றிருக் கின்ற
அறிஞர் நெஞ்ச அரியா சனங்கள்
எனக்கும் கூடச்
சரியா சனத்தைத் தந்திருக்கின்றன !

கழிவிலா மெய்ங்ஞானக் கற்பூரப் பெட்டகமாய்ப்
போற்றக் கிடைத்த புனிதகுரு ! – எனையும்
ஏற்றணைத்த தால்தான் இன்றுவரை நானிங்கே
செல்லரிக்கப் படாத சிறுநூலாய் இருக்கிறேன் !

சிந்தனை ஊற்றுக்கள் நெஞ்சில் உதித்தோடச்
செய்திடும் இவர்களின் எழுதுகோல்
மூஸாவின் கைத்தடியாய்க்
கண்முன்னே காட்சிதரும் !

அறிவுப் பசிப்பயண அன்பர்க ளெல்லாம்
சிறகடிக்கும் வெளவாலாய்ச் சேர்ந்து விருந்துண்ணும்
செஞ்சொற் கனிப்பொழில் இவர்கள் !
மடைக் கரும்பின் இந்த இனிய (அடிப்) பகுதியை
மண் அணைத்துக் கொண்டது.

மண்ணுக்குள் சென்றிருக்கும் இவர்கள் –
எங்கள் ஆணிவேராய் இருக்க்கின்றார்கள் !
நாங்கள் – இவர்களின்
கிளைகளும் விழுதுகளுமாய் இருந்துகொண் டிருக்கின்றோம் !

நில்லா உலகில்
நிற்கும் இவர்களின் சமாதி –
சொல்லேர் உழவர் இவர்கள்
சமுதாயப் பயிர்செழிக்கத்
தம்மைத் தாமே – ஓர்
எருமுட்டாய் விட்டுச் செல்லும் இடம் !

- கவிஞர் கஃபூர் தாசன்