Wednesday, January 21, 2009

புலவர் ஹெச். முஸ்தபா

நிறைபொருட் கவியணி நெஞ்சர்
இறையருட் கவிமணி என்பார்
மறைந்தனர் புவிதனில் என்றார்
நிறைந்தனர் உளமெலாம் என்பேன்!

இறைமறை நபியறம் என்றே
முறையுற மொழிந்தனர் நன்றே
துறைதனில் தமிழ்ப்புலம் கண்டே
உறைந்தனர் புகழ்த்தலம் கொண்டே!

மறப்பற நினைநினை வூட்டிச்
சிறப்புற உரை, கவி நாட்டி
இறப்பெனும் கட்டளை ஏற்றார்
திறத்தினின் அடியாராய் ஏற்பாய்!

உறைவிடம் வழங்கநீ யல்லால்
முறையிடப் பிறஇடம் உண்டோ?
இறைஞ்சினோம் அடிமைகள் உன்பால்
குறையெலாம் பொறுத்தருள் அல்லாஹ்

(ஆமீன்)

- புலவர் ஹெச்.முஸ்தபா, M.A.,M.A.,B.Ed.,

என்ன வேண்டும்?

பட்டுறையில் பொதிந்தெடுத்துப் பக்தியுடன் போற்றும்
பண்பார்ந்த மறையுரகள் நெஞ்சேற வேண்டும்
பட்டங்கள் துணைகொண்டு பாமரரை ஏய்த்துப்
பாழாக்கும் எண்ணங்கள் பஞ்சாக வேண்டும்!

கண்மூடிச் செயலெல்லாம் மண்மூடிப் போகக்
கற்றறிந்தோர் முன்வந்து கருத்துரைத்தல் வேண்டும்!
எண்டிசையும் புகழ்கொண்டே வாழ
எஃகுள்ளம் உருவாக்கும் ஏந்திழைகள் வேண்டும்!

(மனை விளக்கு நூலில் இறையருட் கவிமணி)

"திருமலர்"

நாயக மாலை!
பூலோக இருட்டை
மாய்த்து மறைத்து
முதலில் எழுந்த
முதல்வனின் தூதொளி
சிந்திய கதிர்களை
அனுபவித் தறிந்த
மகிழ்ச்சிக் களிப்பில்
கவி நெஞ்சில் மலர்ந்த
பனி நீர்ப் பூக்கள்!

உம்மத்துக்களின்
உயிர் மீட்சிக்காக
உலகாள்பவனிடம்
மன்றாடுகின்ற
இறுதித் தூதருக்கு
இறையருள் கவிமணி
வாசித்தளித்த
வாழ்த்துப்பா மடல்!

ஆழ அகல இசைச்
சொற்பொருள் நிறை
நய அணி சுவைத்
தேன் ததும்பும்
தீன் பாக்குடம்!

நேச நபியை
நெருங்கிக் காதலித்த
நித்யக் கவிஞரின்
சத்திய ஈரடிகளின்
ஈரம் நிறைந்த
இதய அணிவகுப்பு!

இறையருள் கவியின்
ஆழ்மன அடிநாத
'நாயகமே!' விளியின்
ஒலியதிர்வு அணுக்களின்
கூட்டுத் தொகையில்
எழுந்த எழுத்தக்களின்
கவிச் சொல் வடிவங்கள்!

உலகம் உள்ளவரை
நபிநேசர் உள்ளவரை
ஆன்மீக மணம்
வீசிச் சிறக்கும்
அருள் வாடா மாலை!
நாயக மாலை!
நாவும் அகமும்
இனிக்கும் மாலை!!
மணக்கும் மாலை!!!