Friday, January 9, 2009

காவியச் சுவை

பொற்சைவ வைணவமும்
புத்தபிரான் பொன்னுரையும்
நபிகள்பிரான் நல்லுரையும்
பைந்தமிழின் பண்பேற்றுக்
கற்போரை பிடித்திழுத்துக்
கனிதமிழின் சுவையூட்டி !
நாயன்மார் நாவமுதும்
நல்லாழ்வார் பாசுரமும்
மேயபுகழ் மேகலையும்
மேம்படு சிந்தாமணியும்
மாமுனி தேம்பாவணியும்
மாண்பேறு சீறாவும்
காமுறவே எல்லாரும்
கண்ணாரக் கண்டபோதும்
காவியமாய் இந்நாட்டில்
கதிர்வீசக் காண்கின்றோம்.

- இறையருட் கவிமணி

கவிதை

சீரிய செந்தமிழ் எம்மொழியாம் – எங்கும்
சிறந்திடும் இஸ்லாம் எம் வழியாம்
நேரிய இலக்கியம் போற்றுவதே – எங்கள்
நெஞ்சம் இனித்திடும் நற்பணியாம்

நிறையுள்ள செய்யுளும் உரைநடையும் – பொன்
நெஞ்சத்தைக் காந்தமாய்க் கவர்ந்திழுக்கும்
கறையில்லா இஸ்லாம் இலக்கியமோ – ஒளிக்
கதிர்மழைக் குன்றேன உயர்ந்திருக்கும்.

தனிப்பெரும் சிறப்புகள் மிகவோங்கி – நன்கு
தழைத்திடும் நிலத்தினை வாழ்த்திடுவோம்
இனித்திடும் தமிழினில் மலர்ந்திருக்கும் – உயர்
இஸ்லாம் இலக்கியம் வளர்த்திடுவோம்

- இறையருட் கவிமணி