Monday, January 19, 2009

கவிஞர் சாது

ஓரிறைத் தத்துவ உணர்வுகளை
ஓதிய திருமறைக் கொள்கைகளை
பேரிறைத் தூதரின் போதனையைப்
புரிந்திடச் செய்த கவிமணியே!

இலக்கிய உலகின் மேம்பாட்டை
இஸ்லாம் தந்த வழிபாட்டை
உலகம் போற்றும் நெறிகளிலே
உறுதி யாக்கிக் காட்டியவர்!

மோனை எதுகை மோதிவரும்
முத்தமிழ் மொழியின் பல்சுவையும்
தானே படித்துத் தெளிகின்ற
தமிழாய்ச் செதுக்கித் தந்தவரே!

எழுத்தும் பேச்சும் மணம்வீசும்!
எல்லோர் நாவும் புகழ்பாடும்!
அழுத்தம் நிறைந்த தன்மான
ஆற்றல் ஞானம் பெற்றவரே!

திருவை மண்ணின் புகழுக்குத்
தேன்தமிழ் அப்துல் கபூரவரின்
பெருமை மிக்க பிறப்பென்றும்
பேசப் படுமே சிறப்போடு!

உலகம் காக்கும் பேரிறையே
உயர்கவி யாத்த கவிமணியின்
நலமார் மறுமை வாழ்வுக்கு
நற்றுணை புரிந்திடு அல்லாஹூ!

No comments:

Post a Comment