Thursday, January 8, 2009

வாழும் வானவில்


கவிஞர் ஈரோடு தமிழன்பன்

அடங்கக் கற்ற மலையாய்
அமைதி காத்த கடலாய்
ஒடுங்கி நின்ற விசும்பாய் – நான்
உத்தமர் கபூரைக் கண்டேன்.

அதட்டத் தெரியாத் தென்றல்
அவரின் மெல்லிய பண்பு !
கொதிக்கத் தெரியா நிலவு – அவரின்
குளிர்ச்சி ததும்பும் நடத்தை !

உலர்ந்து போகாப் பனியாய்
உள்ளம் அன்பு பொழியும் !
மலர்ந்து வாடா முறுவல் – அவர்
வ்ட்ட முகத்தில் வாழும் !

புனையும் குழந்தைப் பாட்டில்
பொன்னால் தொட்டில் கட்டிக்
கனிகள் கொய்து தருவார் – அவரே
சுளையாய் கனிந்து வருவார் !

ஓடையும் நதியாய் மாறும்
ஒழுங்கில் வெள்ளம் பாயும் !
மேடையில் தேனின் அருவி – அந்த
மேதையின் பொழிவில் வழியும்

தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாச் சுதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் !

வாழும் வான வில்லாய்
வாழ்வார் தமிழர் நெஞ்சில்
ஏழு வண்ண எண்ணம் – கபூர்
ஏந்தல் ஏந்தி வாழும்.

No comments:

Post a Comment