Thursday, January 8, 2009

போதனை

நற்பண்புகளை நறுக்குத் தெறித்தாற்போல் பிஞ்சு உள்ளங்களில் பதிய வைக்க ஆரம்ப பள்ளிகளில் ஆத்திசூடியை சின்னஞ் சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் உத்தியை நாம் காணலாம்.

ஆத்திசூடி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஒளவையார்தான். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல் உயிரெழுத்து, மெய்யெழுத்துக்களை அகர வரிசையில் பச்சிளம் பிள்ளைகளின் உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் பதிய வைக்கவும், அறப்பண்புகளை அழுத்தமாக போதிக்கவும் ஆத்திசூடி உகந்தது.

ஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்து மாற்றுக் கருத்துக்களை உதித்தவன் நமது மீசைக் கவிஞன் பாரதி.

'தையல் சொல் கேளேல்"
என்று பாட்டி சொல்லி வைத்தாள்.
'தையலை உயர்வு செய்"
என்று எதிர் பாட்டு பாடி வைத்தான் பாரதி.

'ஆறுவது சினம்’ என்றாள் ஒளவை.
இவனோ 'ரௌத்திரம் பழகு’ என்றான். '

‘நுப் போல் வளை’ என்றாள் பாட்டி
'கிளை பல தாங்கேல்" என்றான்
பைந்தமிழ்த் தேனி.

‘தொன்மை மறவேல்’ என்றாள் ஒளவை.
'தொன்மைக் கஞ்சேல்" என்றான் பாரதி.

'போர்த் தொழில் புரியேல்’– இது ஒளவை.
'போர்த்தொழில் பழகு’- இது பாரதி .

'மீதூண் விரும்பேல்’ என்றாள் அவள்.
'ஊண் மிக விரும்பு’ என்றான் இவன்.

இவர்கள் இருவரும் கூறாத கருத்துக்களை இறையருட் கவிமணி அவர்கள் இனிமையுற போதிக்கும் பாங்கினை ‘மனைவிளக்கு’ நூலில் நாம் சுவைத்து மகிழலாம்.

‘இசைவைப் பெறாதயல் இல்லம் நுழையேல்’
‘தரையின் மீது தருக்குடன் நடவேல்’
‘குரலைத் தாழ்த்தி குணமுறப் பேசு’
‘தெரிந்ததைப் பேசு; தெளிவாய்ப் பேசு’
‘மெய்யால் இன்பம் ; பொய்யால் அழிவு’
‘பணிவு உயர்த்தும் ; பெருமை தாழ்த்தும்’


- அப்துல் கையூம்

No comments:

Post a Comment