Thursday, January 8, 2009

நிறைவான வாழ்க்கை அவர் வாழ்க்கை

“கவிஞர்கள் பலரை நான் அறிவேன். சிருங்கார ரசனை ததும்ப அழகிய பெண்களின் அங்கங்களை வருணிப்பவர்கள் எத்தனை பேர்?

கைத்தட்டலுக்காகத் தம் கவிதைகளை அரங்கேற்றுபவர்கள் எத்தனைப் பேர்?

கற்பனைகள் தோன்றுவதற்காக மதுப்பிரியர்களாக மாறித் தள்ளாடியவர்கள் எத்தனைப்பேர்?

அரசியல்வாதிகளை அளவுக்கு மீறிப் புகழ்ந்து அவர்களுடைய அரவணைப்பில் பிரமுகர்களாகக் காட்சியளிப்பவர்கள் எத்தனைப்பேர்?

ஆனால் இத்தகைய மாசுகளும், தூசுகளும், தம் மீது படியாத மர்ஹூம் இறையருட் கவிமணி அவர்களை எப்படி மறக்க முடியும்?”

என்ற சிந்திக்க வைக்கக் கூடிய வினாவை நம் முன் வைக்கின்றார் உத்தம பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கெளதிய்யாக் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எஸ்.ஏ.செய்யது அப்துல்லாஹ் அவர்கள்.

“தோன்றிற் புகழொடு தொன்றுக – அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று”

என்று பகர்வார் ஐயன் திருவள்ளுவர்.

மக்கள் நிறைந்த சபையில் - கற்றவர் நிறைந்த சபையில்... தோன்றுவீரேயானால் புகழொடு தோன்றுவீராக... இல்லையேல் தோன்றாமலிருப்பதே நன்று... என்று இதற்குப் பொருள்.

பிறந்த பிறப்புக்கு ஓர் அர்த்தம் வேண்டும். ஒரு குறிக்கோள் வேண்டும். நான் அவரிடம் மாணவனாக பயின்ற காலத்தில் சுவாமி விவேகானந்தரின் கீழ்க்கண்ட அறிவுரையை அவர் அடிக்கடி நினைவில் நிறுத்துவார்.

“எழுந்திரு !
இவ்வுலகோர் இயங்க உன் தோள் கொடுத்து உதவு.
எத்தனை நாட்களுக்கு இந்த வாழ்வு?
இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்ததற்கு
ஏதேனும் ஒரு நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்லல் வேண்டும்.
இல்லையேல், உனக்கும், கல்லிற்கும். மண்ணிற்கும், மரத்திற்கும்,
என்னதான் வேற்றுமை?”

என்ற பொன்வாக்கிற்கு ஏற்றார்போல் பேராசிரியரின் வாழ்வு ஓர் அர்த்தமுள்ள சகாப்தமாகவே இருந்தது. ‘கண்டதே வாழ்க்கை, கொண்டதே கோலம்’ என்றில்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்கி இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்கள்.

“அப்துல் கபூரோ, ஆமா எவர்க்கும் போடாத அரிமா” என்று கவிஞர் மு.மேத்தா கூறுவதைப் போல் தலை நிமிர்ந்து வாழ்ந்த கம்பீரக் கவிக்குயில் நம் பேராசிரியர்.

அப்துல் கையூம்

No comments:

Post a Comment