Thursday, January 8, 2009

கடலாய் விரிந்த மழைத்துளி

நாம் ..
வெளியில் தெரிய
உடலுக்கு மட்டும் ‘இஹ்ராம்’ தரிக்கிறோம்.
இறையருட் கவிமணி அவர்களோ – தம்
உள்ளத்திற்கே ‘இஹ்ராம்’ தரித்த
மெழுகுவர்த்தி !

தன்னல மறுத்துத்
தன்னையே கரைத்து
ஒளியினைக் கொடுத்தே
உருகிப் போனவர் !

நாக்குத் திரியில் மறைச்சுட ரேந்தி
தீனெறி காட்டிய தியாக விளக்கு !

வளர்ச்சி என்பதன் வாய்மைத் தத்துவ
மலர்ச்சி இந்த மெழுகு வர்த்தியில்..
‘நெடிலாய்ப் பிறந்து குறிலாய் வளரும்’
வடிவ முரணில் வழிவது ஞானம் !

உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்
அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்
பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்
இறயருட் கவிமணி அவர்களின் உள்ளம் !

அதனாலேதான் ..
கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து
அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென்றே
பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை
நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார் !

இதனை..
‘பதவி இறக்கம்’ என்றே
விதண்டாவாதிகள் விவரித்தார்கள் !

நாற்றங் காலாய், நம்குல மணிகளை
நெஞ்சில் வாங்கி வளர்த்த கவிமணி ..
இறங்கி நீரைப் பாய்ச்சி நிமிர்த்ததில்
பிறங்கும் ‘ஏற்றப்’ பொலிவினை எய்தினர் !

அவர்கள்,
உள்ளும் புறமும் தூய வெள்ளையாய்
அல்லும் பகலும் ஆற்றிய அறத்தால் –
தன்னையே இறைவனில் தாரை வார்த்தனர் !

இறைவனில் தன்னை அர்ப்பணித் தார்க்கு
மறைவு உண்டு; மரணம் இல்லை !!

மண்ணில் விழுந்த மழைத்துளி வற்றிக்
கண்ணை விட்டே காட்சி மறையும் !

கடலில் விழுந்த மழைத்துளிக் கூட
காணா மல்தான் போய்விடு கின்றது !
ஆனால் அதுவோ ..
வற்றாக் கடலாய் வடிவெடுக் கின்றது !

இறையருட் கவிமணி அவர்கள் – ஒரு கடல் !!
இறையோ டிணைந்தோர் – (தம்)
இறப்புக்குப் பின்னும்
சிறப்புச் செய்யப்பட்டே வாழ்கிறார் !

கோணல் மாணல் இன்றி நேராய்
வானை நோக்கி வளர்ந்த நெடுமரம்,
வேர்தறித்து வீழ்த்தப் பட்ட பின்னரும் கூட
நிலைக்கு வந்து நிற்பதைப் பார்க்கிறோம்;..
கொடிக் கம்பமாய் !!

மரணம் என்பது –
நேராய் வளர்ந்த மரத்துக்குக் கூட
நிலையான வீழ்ச்சியை நல்குவ தில்லை !
நேர்வழி நடந்த இறை நேயரையா
கோர மரணம் கொன்றொழித்து விடும்?

நேர்மைக்கு வீழ்ச்சி நிரந்தர மில்லை;
தீமைக்கு வாழ்வு நிலைப்பது மில்லை..

- கஃபூர் தாசன்

No comments:

Post a Comment