Wednesday, January 7, 2009

பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு By முதுவை ஹிதாயத் on May 22nd, 2008

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் 21.05.2008 புதன்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக்கூடத்தில் ‘இஸ்லாத்தில் அறிவியல் கண்ணோட்டம்’ எனும் தலைப்பில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

துவக்கமாக காயல் மௌலவி முஹம்மது சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி இறைவசனங்களை ஓதினார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் குறித்த அறிமுகவுரையினை நிகழ்த்தினார்.
இறையருட்கவிமணி பேராசிரியார் கா. அப்துல் கபூர் சாஹிப் அவர்களின் சகோதரர் ஆவார் இவர் என்றார். அவர் ஆற்றியுள்ள பல்வேறு கல்விச் சேவைகள் குறித்து விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புச் சொற்பொழிவாளரான பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பேராசிரியர் கா. அப்துல் கபூர் சென்னை அரசினர் கல்லூரியாக இருந்து, முஹம்மதன் கல்லூரியாகி இன்று காயிதெமில்லத் பெண்கள் கல்லூரி என அழைக்கப்படும் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவராக இருந்த போது அறிஞர் அண்ணா அவர்களை அழைத்து இலக்கிய நிகழ்ச்சி நடத்தினார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருந்த நேரம். அறிஞர் அண்ணாவை உள்ளிட்ட திமுக பிரமுகர்களை கூட்டத்திற்கு அழைக்க அச்சப்பட்ட காலத்தில் இதுபோன்ற நிகழ்வை நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் கபூர் அவர்களை நீக்கியது.

அதனைத் தொடர்ந்து வானம்பாடிகளின் கூடாரமாக விளங்கிய வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி கபூர் சாஹிபை அரவணைத்துக்கொண்டது. அங்கும் அறிஞர் அண்ணாவை அழைத்தார். அப்பொழுது அண்ணா அவர்கள் கபூர் சாஹிப் செல்லுமிடமெல்லாம் என்னை அழைப்பார். அதனைத் தொடர்ந்து கல்லூரியை விட்டு அகற்றப்படுவார் என்றார். வாணியம்பாடியில் உருது கவியரங்கங்கள் நடப்பது வழக்கம். இதன் தொடர்ச்சியாக தமிழில் கவியரங்கங்களை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் கபூர் சாஹிப்.

இறையருட்கவிமணி எனும் பட்டம் வழங்கிய அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியில் நானும், எனது சகோதரர் கபூர் சாஹிபும் சேர்ந்தோம். அப்பொழுது வண்டலூர் பிறைப்பள்ளியை உருவாக்கிய கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் கபூர் சாஹிபை பிறைப்பள்ளி நிர்வாகப் பொறுப்பேற்க அழைத்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

இஸ்லாம் இந்தியாவில் அரேபிய வணிகர்கள் மூலம் பரவிய விதத்தை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தென் பாண்டிச் சீமையாம் இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டணம், தொண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இஸ்லாம் பரவியது. இதனை திருமூலர் ஓரிறைக்கொள்கை என முழங்கி வந்தார்.

அறிஞர் அண்ணா தஞ்சை கூட்டத்தில் பேசிய உரை வீச்சுக்களை நினைவு கூர்ந்த பேராசிரியர் திராவிட கொள்கை ஏக இறைவனை அடிப்படையாகக் கொண்டது தான். இறைவனை மறுப்பதல்ல என்றார்.

அபிவிர்த்தீஸ்வரத்தில் பேசிய அண்ணா 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியக் கூட்டங்களில் பேசியுள்ளேன். இந்த நாடு எங்களை கூட்டத்தில் அழைத்து பேச அச்சப்பட்ட நேரத்தில் இஸ்லாமியத் தோழர்கள் எங்களுக்கு தளம் அமைத்துக் கொடுத்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் தான் தொப்பி அணியாத முஸ்லிம் என்றும், சிலுவை அணியாத கிறிஸ்தவன் என்றும் குறிப்பிட்டார்.

இஸ்லாம் ஒரு அறிவுக் கருவூலமாக திகழ்ந்தது. இதன் காரணமாக போப் ஒருவர் பாக்தாத் மற்றும் ஸ்பெயின் நூலகத்துக்கு வருகை தந்து தனது அறிவுப் பசியைப் போக்கிக் கொண்டார். வில்லியம் என்பவர் பெருமானாரின் கருத்துக்களான கற்பவராக இரு, கற்றுக் கொடுப்பவராக இரு, கற்பவருக்கு உதவுவராக இரு போன்றவற்றை கேட்டு மெய்ச்சிலிர்த்தார்.

இன்று அமெரிக்க வணிகத்திற்கு அச்சுறுத்தலாகத் திகழும் சீனர்கள் அக்காலத்தில் பெருமானாரைச் சந்தித்து தங்களது கலைப் பொருட்களை வழங்கினர். அவர்களது ஞானத்தை அறிந்த நபியவர்கள் ‘சீனம் சென்றேனும் சீர் கல்வி தேடு’ என்ற கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

ஆண்,பெண்களுக்கு கல்வியைக் கட்டாயமாக்கிய மார்க்கம் இஸ்லாம். பெண்களுக்காக கீழக்கரை தாசிம் பீவி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா, காயல்பட்டணம் வாவு வஜீஹா, திருச்சி அய்மான் உள்ளிட்ட கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வில்லியம் ஊரே திருக்குர்ஆன் ஒரு அப்பழுக்கற்ற வேதம் என்கிறார். காயல் நகரில் பயிலும் மாணவர்கள் படிக்கும்போதே திருக்குர்ஆனை மனனம் செய்து கல்லூரியில் ரமளானில் தொழுகை நடத்துகின்றனர். இதன் காரணமாக பல்வேறு உயர்நிலையை அடைகின்றனர்.

இஸ்லாம் கணிதம், மருத்துவம் உள்ளிட்ட அறிவுலகத்திற்கு முன்னோடியாக விளங்கியுள்ளது வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வர். காந்திஜி அவர்கள் அறிமுகப்படுத்திய கதராடைக்கு முன்னோடி இஸ்லாமிய மார்க்கம். இப்படி இஸ்லாத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத ஒன்று என்று கூறினார்.

நிகழ்ச்சியினை முஹம்மது மஹ்ரூப் தொகுத்து வழங்கினார். கபூர் சாஹிப் 'மதி நா' என்னும் மாத இதழை நடத்தி வந்தவர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment