Friday, January 30, 2009

பூவின்மேல் கல்

நாயகத்தின் பொறுமை யுள்ளத்திற்கும், கருணை யுணர்வுக்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது - தாயிப் நகரத்தில் நடந்த நிகழ்ச்சி !

தாயிப் நகர மக்களிடம் ஓரிறைக் கொள்கையை நபிகள் நாயகம் உணர்த்த முயன்றபோது அங்கிருந்த செல்வாக்கு மிக்க மனிதர்கள் நபிகள் நாயகத்தைப் பார்த்துக் கேலியும் கிண்டலுமாகப் பின்வரும் மொழிகளை மொழிந்தார்கள்:

"நீர் இறைவனின் தூதரென்றால்உம்முன் நிற்கும் தகுதி எமக்கில்லைநீர் இறைவனின் தூதர் இல்லையென்றால்எம்முன் நிற்கும் தகுதி உமக்கில்லை"

குத்தீட்டிச் சொற்களால் நாயக உள்ளத்தைக் குத்தில் காயப்படுத்தியும் திருப்தியடையாத அக்கொடியவர்கள் கண்ஜாடை காட்டி நாயகத் திருமேனி மீது கல்லெறிய தாயிப் நகர மக்களுக்குக் கட்டளை யிட்டார்கள்.

கல்லடிபட்டுப் பூவினும் மெல்லிய நாயகத் திருமேனி புண்பட்டுப் பூமியில் இரத்தம் கசிந்து நின்ற அக்காட்சியை இதயம் பதற "இசைமுரசு" நாகூர் ஈ.எம்.ஹனிபா "தாயிப் நகரத்து வீதியிலே..." எனச் சோகக் குரலெடுத்துப் பாடியுள்ள உருக்கமான பாட்டைக் கேட்டு உள்ளம் கசியாதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்?

கவிஞர் மு.மேத்தா மனம் பதைபதைக்கத் தாயிப் நகரக் கொடுமையை இப்படிக் குறிப்பிடுகிறார் :

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்"

'கவிக்கோ' அப்துர் ரகுமான் தன் கவிமொழியில் சற்று வித்தியாசமாக இதைச் சித்தரித்துக் காட்டினார் :

"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்"

இத்தகைய மோசமான சூழலிலும் தாயிப் நகர மக்களிடம் கருணை யுள்ளத்துடன் நபிகள் நாயகம் நடந்துக் கொண்ட காட்சியை,

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே"

எனச் சித்தரித்துக் காடுகிறார், இறையருட் கவிமணி.

- பேராசிரியர், முனைவர் ஹ.மு.நத்தர்சா,
தமிழ்த்துறை, புதுக் கல்லூரி, சென்னை - 14

No comments:

Post a Comment