Friday, January 30, 2009

ஏ.வி.எம். நஸீமுத்தீன்

தூமணிப் பாவலன், திருவிதாங் கோட்டு
மாமகன், தமிழ்ச்சுவை மாந்திட வைத்தவன் !
நாமகன் பன்மொழி நாவில் வளைத்தவன் !
கோமகன் அப்துல் கபூர்உயிர் நீத்தனன் !

பாவளம் செழித்த 'பதினென் மாலை'கள்
ஆவணம் என்றே அளித்த பாவலன் !
பூமணங் கமழும் 'அரும்பூ' தொடுத்தவன் !
நாமணங் கொண்ட நற்றமிழ் வித்தகன் !

'மனைவிளக்' கொளியில் 'மனவிளக்' கேற்றினான் !
தனிமொழித் திறத்தால் 'இறைமொழி' பாடினான் !
நினைவெலாம் இனித்திட 'நபிமொழி' நல்கினான் !
மனம்மொழி மெய்யெலாம் மதுரமே தூவினான் !

பல்லுயர் சிறப்பெலாம் படைத்த வல்லுநன்
கல்வியின் பணியிலே கரைந்த விற்பனன் !
மெல்லிசை பாடல்கள் வடித்த அற்புதன் !
பல்பொருள் விரித்த 'மதிநா' நாயகன் !

நேயனாம் அருட்கவி அப்துல் கபூரெனும்
தூயவன் வாழ்க்கை தமிழின் சாசனம் !
போயவன் படைப்பெலாம் பரவச் செய்திட
யாமிவண் ஆற்றுவம்.. கவிமணி வாழ்ந்திட !

No comments:

Post a Comment